Wednesday, July 29, 2020

கொலையும் செய்வார் சாமியார்

கொலையும் செய்வார் சாமியார்.




அதிகாலை வேளை, மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த அழகிய கான்சாபுரம் மெதுவாக விழித்துக்கொண்டிருந்தது. பெருமாள் கோயிலுக்கு அருகே இருக்கும் குறுகிய சந்தில் தமிழிலிலும் இந்தியிலும் பெயர்பலகையில் எழுதியிருந்த ‘ஸ்தாபித வருஷம்’ அந்த மடத்தின் பழைமையைப் பறைசாற்றியது. மடத்துக்குச் சொந்தமான எல்லாக் கோயில்களையும், பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இங்கிருந்துதான் நிர்வாகம் செய்யப்படுகிறது. தன் அலுவலக அறையில் அமர்த்திருந்த மடத்தின் தலைவர் நரேந்திர சுவாமி அன்றைய தினநாளிதழிலில் அரசியல் செய்திகளை மேய்ந்து கொண்டிருந்தார்.

‘சுவாமி! உங்களப் பார்க்க நம்ம டிஸ்ரிட் எஸ்பி ஜெயச்சந்திரன் வந்திருக்கார்.’ என்றார் நரேந்திர சுவாமியின் உதவியாளர் சாரதி என்ற பார்த்தசாரதி.

‘யாரு? அந்த சீவலப்பேரிக்காரனா?’ என்றார் நரேந்திர சுவாமி.

‘ஆமாஞ்சாமி’ என்றான் சாரதி.

‘என்ன விஷயம்?’

‘உங்களப் பாக்கனும்னு சொன்னார்’ என இழுத்தான் சாரதி.

‘என்ன ஏதுன்னு கேட்கப்படாதா? சரி சரி இந்தச் சேர வெளிய எடுத்துப்போட்டுட்டு அவன உள்ள அனுப்பு’ எனக் கடிந்து கொண்டார் சுவாமி.

காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் காலில் பூட்ஸ் இல்லாமல், ஒரு கையில் தொப்பியும் மறு கையில் சிறு பழத்தாம்பாளத்துடன்  உள்ளே நுழைந்தார். ஆறடி உயரமும், ஒட்ட  வெட்டிய முடிவெட்டும்,  காக்கி மிடுக்கும் பார்ப்பவர்களைப் பணியவைக்கும் ஆற்றலுடைய ஜெயச்சந்திரன் மிகவும் பணிவாக பழத்தாம்பாளத்தைக் கீழே வைத்து சுவாமியின் காலருகே விழுந்து நமஸ்காரம் பண்ணினார்.

‘நல்லா இருக்கீங்களா ஜெயச்சந்திரன்?’ என்றார் நரேந்திர சுவாமி புன்னகையோடு.

‘நல்லா இருக்கேன் சாமி. ரொம்பநாளாப் பாக்க வரனும்னு நினைச்சிட்டு இருந்தேன் இன்னைக்குத்தான் நேரம் வந்திருக்கு.’ என்றார் பவ்யமாக.

நரேந்திர சுவாமியின் மனதில் ‘இவன் ப்ரொமோசனுக்கு நம்மிடம் வந்திருக்கானோ?’ என மனதில் பல மனக்கணக்குகள் ஓடிக்கொண்டிருந்தது.

இருவரும் நலங்களை விசாரித்த பின்பு ஜெயச்சந்திரன் தொடர்ந்தார். “நான் உளவுத்துறையையும் சேர்த்துக் கவனிக்கிறேன் சாமி. நேத்து ஒரு முக்கியமான தகவல் கிடைச்சுது அதையும் சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன். உங்க மடத்தோட கட்டுப்பாட்டுல இருக்கிற பெருமாள் கோயில் நகைகளக் கொள்ளையடிக்க ஒரு வடநாட்டுக் கும்பல் ப்ளான் பண்ணிருக்கு. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள நடக்கலாம். உங்க கோயில் ஆட்கள அலர்ட் பண்ணுங்க. தேவையில்லாம நகைகள வெளிய எடுக்கவேண்டாம். இந்த வடநாட்டுக்கும்பல் கொலை செய்யவும் தயங்கமாட்டாங்க, அதனால கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையா இருப்பது நல்லது. இதப் பத்தி எங்க டிபார்ட்மண்ட்ல இருந்து அபீசியலா உங்களுக்கு தகவல் வரும்.’ என்றார் ஜெயச்சந்திரன்.

சுவாமியின் முகத்தில் லேசாகக் கவலை ரேகைகள் படர்ந்தன.

‘சரி! நான் பார்த்துக்கொள்கிறேன்’ என வழியனுப்பி வைத்தார் நரேந்திர சுவாமி.

ஜெயச்சந்திரன் வெளியேறினவுடன் அவசரமாக சாரதியை அழைத்தார் நரேந்திர சுவாமி.

‘டேய் சாரதி ! சிவகாசில இருக்கிற அக்கௌண்டன்ட் ஆனந்த் சர்மாவுக்கு மேனேஜர் ப்ரொமோஷன் குடுத்து பெருமாள் கோயிலுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணு. ஒரு வாரத்துல ஜாயின் பண்ணச் சொல்லி அர்ஜண்ட்டா உடனே ஒரு லெட்டர் டைப் பண்ணுடா. ‘ என்றார் நரேந்திர சுவாமி அவசரமாக.

‘சுவாமி! என்ன இது? ஆனந்த சர்மாவுக்கும் உங்களுக்கும் தீராத பகை. அவன் இதே பெருமாள் கோயில்ல இருக்கும்போது குடுக்காத குடைச்சலா. பணக்கையாடல்னு கோர்ட்டுக்கெல்லாம் போய் உங்கள அசிங்கப்படுத்திட்டான். அப்பவே அவனத் தட்டிவைக்காம அவன சிவகாசிக்கு மாத்துனீங்க. அவன் பெண்டாட்டி உங்கள வந்து பாத்து அழுது இங்க மாற்றல் கேட்டப்பக்கூட அவன இங்க மாத்தலையே. இப்ப, அவன மேனேஜர் ஆக்கி நம்ம பக்கத்துலேயே வைக்கணுமா?’ என்றான் கவலையுடன்.

‘சொன்னத மட்டும் செய்டா! அதிகப்பிரங்கித்தனமா எதுவும் சொல்லாத. அப்படியே கான்ராக்டர் குருமூர்த்திய இன்னைக்கே என்ன வந்து பாக்கச்சொல்லு’ என்றார் நரேந்திர சுவாமி.


ஒரு மாதம் உருண்டோடியது. அன்று இரவு ஜெயச்சந்திரனின் கைபேசி அலறியது. எடுத்துப் பேசியதும் குழப்பினார். உடனே பெருமாள் கோயிலுக்கு விரைந்தார் ஜெயச்சந்திரன். கோயில் வளாகத்துக்குள்ளே ஆனந்த் சர்மா கொலை செய்யப்பட்டுக் கிடந்தது அவரின் மன உறுதியை அசைத்துப் பார்த்தது. எப்படி நடந்திருக்கும்? இக்கொலையின் நோக்கம் என்னவாக இருக்கும்? இரண்டுநாட்களுக்கு முன்புதான்  வடநாட்டுக் கொள்ளையர்களை கைது செய்து விசாரித்துக் கொண்டிருக்கும் நேரம் இந்தக் கொலை எப்படி நடந்தது என்பதை உடனடியாக யூகிக்க முடியவில்லை. வேற கும்பல் சம்பவத்த நடந்திருச்சா? நிறைய கேள்விகள்.

விரைப்பாக சல்யூட் அடித்த ஆய்வாளரிடம், ‘கோயிலுக்குள்ள சம்பவம் நடந்ததால இது கண்டிப்பாக பெரிய பிரச்சனையாக வாய்ப்பிருக்கு. நாளை காலைல ரிபோர்ட்டோட என்னை வந்து பாருங்க’ என்றார் ஜெயச்சந்திரன்.

மறுநாள் எல்லா தினநாளிதழ்களின் முதல் பக்கத்தில் ஆனந்த் சர்மா பெருமாள் கோயிலுக்குள் கொலைசெய்யப்பட்டிக் கிடந்த காட்சியும் செய்தியும் வெளியானது சட்டசபை வரை சென்றது.

நண்பகலுக்குப் பின் வந்த ஆய்வாளரிடம் பேசியதில் கொலைக்குப் பயன்படுத்துன ஆயுதங்கள் எல்லாமே கட்டுமானத்துக்குரிய கருவிகள், மண்வெட்டிக் கம்பு, இரும்புக் கம்பி. ஒரு மாதமாக கோயிலுக்குள்ள கட்டுமானம் நடந்திருக்கு. முக்கியமாக நகைகள் எதுவும் திருடு போகவில்லை.


முதலமைச்சர் இருந்ததால், காலையில் சென்னை கோட்டை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது, முதலமைச்சர் அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் ஜெயச்சந்திரனை அணுகியவர் ‘சிஎம் கூப்பிடுறாங்க சார்’ என்று கூறி முதலமைச்சர் அறைக் கதவைத் தொறந்துவிட்டார்.

‘வாங்க ஜெயச்சந்திரன்! ஹவ் ஆர் யூ?’ என வரவேற்றார் முதலமைச்சர்.

விரைப்புடன் சல்யூட் அடித்து, ‘நல்லாருக்கேன்‘ என்றார் ஜெயச்சந்திரன்.

‘அவசரமாப் பாக்கனும்னு அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டிருக்கிறீங்க. என்ன விஷயம்?’ என்றார் நிதானமாக.

‘இந்த ஆனந்த சர்மா கொலை கேஸ் விஷயமா பேசனும்’ என்றார் பவ்யமாக.

‘சொல்லுங்க, Already my secretary briefed me about the case. குற்றவாளிய நெருங்கிட்டீங்களா?’ என்று உடனே நேரே சேதிக்கு வந்தார்.

‘அதப்பத்திதான் பேச வந்திருக்கேன். சம்பவம் நடப்பதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னே நரேந்திர சுவாமியப் பாத்து வார்ன் பண்ணினேன். அவரும் எச்சரிக்கையா இருப்பதாகச் சொன்னார். சம்பவம் நடக்கறதுக்கு ரெண்டு நாளுக்கு முன்ன நாங்க அந்த வட நாட்டுக் கும்பல அரெஸ்ட் பண்ணிட்டோம். அப்படி இருந்தும் சம்பவம் நடந்திருச்சி. சம்பவம் நடந்த அன்று எந்த நகைகளும் காணாமப் போகல. விசாரிச்சா, கோயிலுக்குள்ளே கட்டுமானம் நடந்துட்டு இருந்திருக்கு. அங்க விசாரிச்சா,  கோயில்ல இருந்த சிவில் வேலை பண்றவங்கதான் கொலை செஞ்சதுன்னு தெரிஞ்சுது. மோட்டிவ் என்னன்னு பாத்தா அவனுக காண்ராக்ட்டர் குருமூர்த்தியக் கைகாமிக்கிறாங்க. ஆனந்த் சர்மாவ கொல்ல அனுப்பியது காண்ராக்டர் குருமூர்த்தி. அவனப் பிடிச்சி விசாரிச்சா, அவன் நரேந்திர சாமிய கைகாமிக்கிறான்.

‘இஸ் இட்?’என வியந்தார் முதலமைச்சர்.

‘ஆமாம்! மடத்துக்குரிய ஸ்கூல், கோயில் இதுல நடக்குற construction வேலைய பாத்துகிட்ட குருமூர்த்தி, நரேந்திர சாமிக்கு எப்பவும் சின்ன சின்ன அடிதடி வேலைகளையும் செஞ்சிருக்கிறான். நான் ஏற்கனவே கொள்ளைச் சம்பவம் நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சவுடனே நரேந்திர சாமி கணக்குப் போட்டுட்டார்.

ஏற்கனவே ஆனந்த் சர்மாக்கும் நரேந்திர சாமிக்கும் பகை இருந்திருக்கு. இருந்தும் அவருக்கு மேனேஜர் ப்ரோமோஷன் குடுத்து இங்க வரவச்சுட்டாரு. இப்போ ஆனந்த் சர்மாவையும் குருமூர்த்தியையும் ஒரே புள்ளியில இணைச்சுட்டார் நரேந்திர சுவாமி.

ஒரே கல்லுல இரண்டு மாங்கா. நகைகளைப் பாதுகாக்கணும் அதேநேரத்தில ஆனந்த் சர்மாவையும் தட்டிவைக்கணும்.

கொள்ளையத் தடுக்க குருமூர்த்திட்டச் சொல்லி அவனோட ஆட்கள கோயில்ல ஒரு மாசம் இருக்க வைச்சிருக்காரு. குருமூர்த்திக்கு கோயில்ல ஒரு சின்ன காண்ட்ராக்ட் வேலை குடுத்து அவனோட ஆட்கள அங்கயே படுக்கச் சொல்லிருக்கார், காவல் காக்க. அதோட அவனுகளுக்கு ஒரு அசைன்மெண்ட், கொள்ளைக்காரங்க வரும்போது ஆனந்த் சர்மா இருந்து, கொள்ளையர்களுடன் போராடினா ஆனந்த் சர்மாவுக்கு உதவக் கூடாது, நகைகள் மட்டும் திருடுபோகாமல் தடுக்க வேண்டும்.

ஆனா கடைசிவரை கொள்ளையர்கள் வரவே இல்ல. அதனால நரேந்திர சுவாமி
ஆனந்த் சர்மாவைத் தட்டி வைச்சிட்டு இடத்த காலி பண்ணச்  சொல்லியிருக்கிறார். ஆனா அடிதாங்காம செத்துப் போய்ட்டார் ஆனந்த் சர்மா.

தன்னை நல்லவராக காட்டிக்கவும் சந்தேகம் வராம பாத்துக்கவும் ஆனந்த் சர்மாக்கு மேனேஜர் ப்ரோமோஷன் குடுத்து கொள்ளை அடிக்கப் போகிறார்கள்னு தெரிஞ்சே அவர இங்க போஸ்ட்டிங் போட்டிருக்கிறார்.‘  எனச் சொல்லி முடித்தார் ஜெயச்சந்திரன்.


‘Oh. Very clever. He put him in the front line intentionally. அரசர்கள் போர் சமயத்துல தனக்கு வேண்டாத தளபதி இல்ல கிளர்ச்சி பண்ணும் வீரர்களை இந்த மாதிரி படைகளுக்கு முன்னே அனுப்பி எதிரி தாக்கும்போது மற்ற வீரர்களைப் பின்வாங்கச் சொல்லிருவாங்க. எதிரிட்ட சிக்கவைத்து கிளர்ச்சி பண்ணும் தளபதிகளைக் காலி பண்ணும் ஒரு strategy. He used the same strategy.
ம். How strong is the case? இதஅரசியல் பழிவாங்கல்ன்னு மாத்த வாய்ப்பிருக்கு.’ என்றார் ஆர்வமாக.

‘கேஸ் ரொம்ப ஸ்ராங்க். வெளிய வரமுடியாத செக்‌ஷன்லதான் போட்டிருக்கு. குருமூர்த்தி அப்ரூவர் ஆகிட்டான். அவனுடைய வாக்குமூலம் எல்லாம் ரெடி. நரேந்திர சுவாமிக்கு அரெஸ்ட் வாரண்ட்டும் வாங்கியாச்சி. உங்ககிட்ட சொல்லி அப்ரூவல் வாங்க. அவரும் நீங்களும் ஒரே ஜா....’ என இழுக்க.

‘Stop it, ஜெயச்சந்திரன். சட்டம் தன் கடமையச் செய்யட்டும். யு கேன் கோ’
என்றார் கடுகடுப்புடன்.

அன்று இரவு, ஆறடி உயரமும், ஒட்ட  வெட்டிய முடிவெட்டும் மிடுக்கும் பார்ப்பவர்களைப் பணியவைக்கும் ஆற்றல் உடைய ஜெயச்சந்திரன் கான்சாபுரம் மடத்திற்குள் தலையில் தொப்பியுடன், பூட்ஸ் காலுடன் நுழைந்தார், நரேந்திர சுவாமியைக் கைது செய்ய.

நெஞ்சில் துறவார் துறந்தாற்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.


உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப்போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.
====================================================================================
Disclaimer: All characters, Incidents, Names, Places and corporations or establishments appearing in this document are fictitious. Any resemblance to real persons, living or dead, is purely coincidental.
========================================================================

Tuesday, February 25, 2020

அருள் இராயப்பன் - 2, மனிதக்கறி






அருள் இராயப்பன் - 2


மனிதக்கறி


திண்டுக்கல் இறையியல் கல்லூரியில் இறையியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் அருள் இராயப்பனும், ரோனியும் மும்பை செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்தின் முதலாம் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார்கள்.

பாதிரியார் பட்டப் படிப்பை முடிக்க பாப்புவா நியூ கினியாவிலிருந்து திண்டுக்கல் வந்திருக்கிறான் ரோனி. இன்னும் சிறிது நேரத்தில் ரயில் வந்து விடுவதற்கான அறிகுறி தென்பட்டது. ஒரு பாக்கெட் பிஸ்கட் எடுத்துப் பிரித்து ரோனியிடம் கொடுத்தான் அருள் இராயப்பன்.

"சைவ உணவுக்கு நீங்க மாறிட்டதால உங்களுக்குத்தான் இது அதிகம் வேணும்." என்றான் ரோனி நக்கலாக.

அதைப்  பொருட்படுத்தாமல், "ஆமாம் ரோனி, மணிமாறன் ஊர் திருவிழாவிலிருந்து சைவ உணவுக்கு மாறினதும் மாறினேன், இந்த மூனு வாரங்களா அதிகமாச் சாப்பிட வேண்டியிருக்கு" என்றான் அருள்.

"இருக்காதா பின்ன, ஒரு யானை ஒரு நாளைக்கு 18 மணி நேரம் சாப்பிடுது. அதே நேரம், ஒரு புலி 4 நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடுது. இதுதான் சைவ உணவுக்கும் அசைவ உணவுக்கும் உள்ள வேறுபாடு. தினமும் நீங்க அதிக மரக்கறி சாப்பிடணும் அருள்" என்றான் ரோனி.

மும்பை செல்லும் ரயில் நடைமேடையில் வந்து நின்றது. சரியான பெட்டியைப் பார்த்து ஏறி இருக்கையில் அமர்ந்தார்கள் அருளும் ரோனியும்.

ரயில் பயணிகளையும் அவர்களை வழியனுப்ப வந்தவர்களையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான் ரோனி. பெட்டிகளை இருக்கைக்கு அடியில் வைத்து சங்கிலி போட்டு பூட்டுப் போட்டு நிமிர்ந்தான் அருள்.

ரயில் மெதுவாக நகர்ந்தது. எதிர் இருக்கையிலிருந்து ரயில் சத்தத்தையும் மீறி வீடியோ கேம் சத்தம் வந்துகொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்தவன் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் சத்தத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

ரோனிக்கு வீடியோ கேம் சத்தம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது.

“பொது இடத்துல இப்படிச் சத்தம் வைக்கலாமா? மற்றவர்களும் இந்த ரயிலில் பயணம் செய்கிறார்கள்னு நினைக்க மாட்டாங்களா? “ என்றான்  ரோனி சன்னமான குரலில்.

“என்ன ரோனி, தேவாலயத்தில் நீங்க பேசும்போது குழந்தை அழுதால், ஓடினால் என்ன செய்வீங்க. அதைப் பொருட்படுத்தாம பேசுவீங்கல்ல. அதுபோலத்தான். நாங்க எப்பவுமே noisy community” என்றான் அருள்.

வீடியோ கேம் விளையாடுபவன் அதில் மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அங்கு சீருடை அணிந்து வந்தவன் “ சார்! நாளைக்கு ப்ரேக்பாஸ்ட்டும், லஞ்ச்சும் என்ன வேணும்? ஆர்டர் எடுக்க வந்திருக்கிறேன்.” என்றான்.

“என்ன இருக்கு?” எனக் கேட்ட அருளுக்கு மனப்பாடமாக வரிசையாகச் சொன்னது அவன் இந்தத் துறையில் பலகாலமாக இருப்பதை உணர்த்தியது.

“ எங்க ரெண்டு பேருக்கும் காலைல ப்ரட் ஆம்லெட். மத்தியானத்துக்கு எனக்கு தயிர்ச்சோறு, அவருக்கு சிக்கன் பிரியாணி” என்று கூறி, வந்தவனை வழியனுப்பிவைத்தான் அருள்.

“என்ன அருள்! நீங்க சைவத்துக்கு மாறினாலும் முட்டைய விடலியா?” என்று வினவிய ரோனிக்கு “முட்டை அசைவம் கிடையாதே.” என்று பதிலளித்தான் அருள்.

“இங்க சைவம் அசைவம்னு மக்கள் ரொம்ப கண்டிப்பா இருக்காங்க. அடிப்படையில மனிதன் இறைச்சி உண்ணும் பிராணிதானே. மனிதன் எல்லாத்தையும் தின்பவனே. வெட்டுக்கிளி, ஈசல், எலி, கௌதாரி என்று எதுகிடைத்தாலும் திம்பான். மலேசியால எண்ணெய் பனைமரத்துல இருக்கிற புழுவ விரும்பிச் சாப்பிடுவாங்க.” என்று மக்களின் சாப்பாட்டுச் சிக்கலைத் துவங்கி வைத்தான் ரோனி.

“சரிதான் ரோனி! ஆனாலும் இந்தச் சமூகத்துல இப்படிச் சாப்பிடுபவர்கள சரிநிகராவா நடத்துறாங்க. இல்லையே. மாட்டுக்கறி சாப்பிடுபவன் பன்றிக்கறி சாப்பிடுபவரைப் பாத்து முகஞ்சுழிக்கிறான். ஆட்டுக்கறி சாப்பிடுபவன், மாட்டுக்கறி சாப்பிடுபவர்களைப் பாத்து முகஞ்சுழிக்கிறான். சைவம் சாப்பிடுபவன், முட்டை சாப்பிடுபவர்களைப் பாத்து முகஞ்சுழிக்கிறான். நாம எல்லோரும் நாய், பூனை, பாம்பு, பல்லி, பூரானச் சாப்பிடுபவர்களைப்பாத்து முகஞ்சுழிக்கிறோம். இதுல எதைச் சாப்பிட்டாலும் எதுவுமே குத்தமுமில்ல. எது சாப்பிடணுங்கறது அவரவர்களுடைய விருப்பம். சாப்பிடுறவங்கள கீழாக பாக்கவேண்டியதில்ல. எல்லாமே கொழுப்பும் புரதமும்தானே.” என்றான் அருள்.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.

“சரி விடுங்க, எங்க ஊரு இப்படித்தான். நீங்க வந்து ஒரு மாசத்துக்கும் மேல ஆகிடுச்சி ரோனி. எங்க ஊர எப்படிப் பாக்குறீங்க. மணிமாறன் ஊரில் நடந்த மாடு பலி கொடுக்கும் திருவிழா போல உங்க ஊருல எதுவும் உண்டா ரோனி?” என்றான் அருள்.

“அந்தக்காலத்துப் பழங்குடி சமுதாயத்தில் விலங்கு பலியிடுதல், மனிதனைப் பலியிடுதல் எல்லாம் இயல்புதானே. அது மாதிரிதான் ” என்றான் ரோனி.

“பலியிட்டா ஒரு சடங்கோட முடிஞ்சிடும். பலி இட்டதச்  சாப்பிட்டா? பாப்புவா நியூகினியால மனிதக்கறி சாப்பிடுபவர்கள் இருந்திருக்கிறார்கள் என கேள்விப்பட்டருக்கிறேன். இன்னும் அந்த மாதிரி இருக்கா ரோனி?  இன்னும் இரண்டு மாதங்களில் நான் உங்க நாட்டுக்குப் போகணும். ” என்றான் அருள் சிறிய பயத்தோடு.


 “இப்போ கிடையாது ஆனா முன்னால இருந்துச்சி. ஏன், எல்லா நாட்டுலயும்தான் இருந்துச்சி. உலகத்துல நிறைய இடத்துல மனிதக்கறி சாப்பிடுபவர்கள் இருந்திருக்கிறார்கள். வளர்ந்த நாடுகள்னு சொல்ற அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ, காங்கோ என்று நிறைய எடுத்துக்காட்டு சொல்லலாம். ஆனா ஒவ்வொரு நாட்லயும் ஒரு மாதிரி.
சடங்குக்காக, நரபலிக்காக, தப்பிப்பிழைப்பதற்காக, பழிவாங்குவதற்காக.

உருகுவே விமான விபத்து நடந்தப்ப நடந்த நரமாமிச சம்பவம் தப்பிப்பிழைக்க நடந்த ஒரு எடுத்துக்காட்டு.

ஒரு 150 ஆண்டுகளுக்கு முன்ன, அடிக்கடி இரண்டு இனக்குழுக்கள் இடையே நடக்கும் சண்டையில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவில் இருப்பவர்களைப் பிடித்துக் கொண்டுபோய் சமைத்து சாப்பிடுவது வழக்கம். இது கோராய் இனக்குழுவில் இருக்கும் நாட்டுப்புறப் பாடல்மூலம் தெரிஞ்சிக்கலாம்.

ஏ ஏ  சின்ன மச்சான்!
என்னபுள்ளே!
எங்க போற மச்சான்!
வேட்டைக்குப் போறேன் புள்ளே,
எனக்கு என்ன கொண்டு வருவ,
என்ன வேணும் சொல்லு புள்ள,
எனக்குக்  கொழுத்த "பெரிய பன்னி" வேணும் மச்சான்!
கண்டிப்பா "பெரிய பன்னி" கொண்டுவரேன் புள்ளே.
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்திப் பொழுதின் போது,
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
"பெரிய பன்னிக்காக" என்று கடற்கரையில் நின்று பாடுகிறாள் காதலி.

இது பழிவாங்கும் நடவடிக்கைக்காக நடத்தப்படும் நரமாமிச சம்பவங்கள்.

அடுத்து சடங்கு சம்பிரதாயத்துக்காக நடத்துவது.

கோரோவாய் குழுவில் சாகும் தருவாயில் இருக்கும் வயது முதிர்ந்தவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒரு முழுநிலவு நாளில், காட்டில் இருக்கும் உயர்ந்த மரத்தின் உச்சியில் அவர்களைக் கட்டி வைத்து விடுவார்கள். அதுவும் லூசாக. பின்பு மர அடிவாரத்தில் நள்ளிரவு வரை பூசை நடக்கும். பூசை முடிந்தவுடன்,

"பழம் பழுத்துருச்சி, விழப்போகுது..
பழம் பழுத்துருச்சி, விழப்போகுது.. "


என்று மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து பாட்டுப்பாடி நடனமாடுவார்கள்.


பின்பு எல்லோரும் மரத்தைப் பிடித்து உலுப்புவார்கள். லேசாகக்  கட்டியிருக்கும் வயதானவர்கள், மேலிருந்து கீழே விழுந்து மரணிப்பார்கள்.


அவர்களை அங்குள்ள மக்கள் வெட்டிச் சமைத்துப் பரிமாறுவார்கள். அவர்களின் கறியைச் சாப்பிட்டால் அவர்களுடைய ஆற்றல் இவர்களுக்கு வரும் என நம்பிக்கை.

இது சடங்கு சம்பிரதாயத்துக்காக நடந்த நரமாமிசத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.” என்று நீண்ட உரையை முடித்தான் ரோனி.

“ரோனி, இங்கேயும் அகோரின்னு சாதுக்கள் இருக்காங்க. அவர்களப் பொருத்தவர உயிரற்றவைகளச் சாப்பிடுவாங்க. கொன்னு சாப்பிடுவதில்ல. பழம்கூட மரத்திலிருந்து பழுத்து கீழவிழுந்தததான் சாப்பிடுவாங்க. அதேமாதிரி இறந்த மனித உடல்களச் சாப்பிடுவாங்க. அது இன்னும் நடக்குது. மனிதனைப் பலியிடுதல், மனிதக்கறி சாப்பிடுவது எல்லா மதங்களிலும் இருக்கிறது. சிவன் பிள்ளைக்கறி கேக்கலியா? இப்ராகிம் தன் மகனைப்  பலி கொடுக்கப் போகலையா? நம்ம பைபிள்ல பிள்ளைக்கறி சாப்பிட்ட கதைக இருக்குதே.” என்றான் அருள் இராயப்பன்.

இதைக் கேட்டதும் எதிரே இருந்தவன் மெல்லத் தலையை தூக்கிப் பார்த்தான் பின்பு வீடியோ கேம்சில் மூழ்கினான்.


“அருள், ஒரு உண்மையச் சொல்றேன். நான் கோரோவாய் இனக்குழுவைச் சேர்ந்தவன். எங்கள் இனக்குழுவினர் மனிதக்கறி உண்டக் குழுவினர். வரலாற்றில் கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட மனிதக்கறி உண்டது பாப்புவா நியூகினியால இருந்த எங்க இனக்குழுதான். நாங்கள் அதிகமாகச் சாப்பிட்டது பாதிரியார்களைத்தான். அதே இனக்குழுவில் இருந்துதான் நான் படித்துப் பாதிரியார் ஆகியிருக்கிறேன்.” எனச் சிரித்தான் ரோனி.

“இந்தமாதிரி மனநிலைல இருக்குற மனிதர்கள் எப்படி சமூக கட்டமைப்புல இருப்பாங்க ரோனி? பழக பயமா இருக்காதா?” என குழப்பத்துடன் வினவினான் அருள்.

 “எங்களுக்கும் காதல் உண்டு, காமம் உண்டு, வெறுப்பு உண்டு, கோபம் உண்டு, சோகம் உண்டு. தலைமைப்பண்பு வளர்த்து தலைமைப் பொறுப்பு ஏற்பதுண்டு. நாங்களும் சராசரி மனிதர்கள்தான் அருள். பாப்புவா நியூகினியா ஒரு தீவுக்கூட்டமானதால எங்களுக்கு மற்ற மக்களின் நாகரீகம் தெரிய வாய்ப்பில்லாமல் போச்சி. மழைக்காடுகள் நிறைந்த பாப்புவா மற்ற உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் நாங்களும் உங்களமாதிரிதான் இருந்திருப்போம்.” என்றான் ரோனி கம்மிய குரலில்.

“உண்மைதான் ரோனி, எங்களுக்கு அரேபியர்கள் அல்ஜீப்ரா கொண்டு வரும்வரை அல்ஜீப்ரா என்றால் என்னன்னே தெரியாது. அதுமாதிரிதான் பட்டு. சீனர்கள்ட்ட இருந்துதான் கத்துகிட்டோம். இது மாதிரி நிறைய கண்டுபிடிப்புக்கள், நாகரீகங்கள் வரலாறு முழுவதும் பரவிக்கொண்டே இருந்தன” என்றான் அருள் இராயப்பன்.


எவ்வளவு நேரம் தூங்கினான் எனத் தெரியாமல் மறுநாள் காலை ரோனியின் சத்தம் கேட்டு மெதுவாகக் கண்களைத் திறந்தான் அருள். காலைச்சிற்றுண்டி பரிமாறிக் கொண்டிருந்தவருடன் ரோனி ஆங்கிலத்தில் எதோ சொல்லிப் புரியவைக்கப் போராடிக்கொண்டிருந்தான்.

எழுந்த அருள், “என்ன வேணும் ரோனி” என்றான்.


“இன்னைக்கு மதிய சாப்பாட்டுக்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணியிருந்தேன். அத மாத்தணும்.” என்றான் ரோனி.


பொழுதும் கறி சாப்பிடுபவன் எதுக்கு இப்படி கேட்கிறான் என நினைத்துக் கொண்டே, “சரி, என்ன வேணும்?” என வினவினான் அருள்.


“தயிர்ச்சோறு” என்றான் ரோனி முகமலர்ச்சியாக.

வந்தவரிடம் தமிழில் விளக்கி மாத்தினான் அருள். அப்பொழுது ரோனியின் அருகே புதிதாக இருந்த நூலைக் கவனிக்கத் தவறவில்லை.

“Thirukkural - English Translation and commentary”

“இந்த புக் வாங்கியிருந்தீங்களா ரோனி?”

“இல்ல, இத நேத்து நைட்டு நமக்கு எதிர்ல உக்காந்து வீடியோ கேம்ஸ் விளையாடிட்டு இருந்தானே அவன் குடுத்தது. நாம உணவப் பத்தி பேசுவத கேட்டிருப்பான் போல. நான் பாதிரியார்னு தெரிஞ்சவுடனே இதக் குடுத்து துறவுப் பகுதியப் படிக்கச் சொன்னான். இப்படி ஒரு பொக்கிசத்த இதுவரை நான் படித்ததில்லை. ஒரு இரவிவுல படிக்கிற புக்கா இது. அவன் சேலத்துல இறங்கும்போது இத எனக்கு கிப்ட்டா குடுத்துட்டுப் போனான்.” என்றான் ரோனி.

“ஓ. அதுதான் நீங்க சிக்கன் பிரியாணி ஆர்டரை கேன்சல் பண்ண ரகசியமா? “ எனச் சிரித்தான் அருள்.


“ஆமாம். துறவற இயலில் புலான்மறுத்தல் மட்டும்தான் படித்தேன். அதுக்கே இப்படின்னா? “ என வியந்தான் ரோனி.


“ஒருவர் சைவ உணவுக்கு மாற சில காரணங்கள்தான் இருக்கு. உயிரைக் கொல்லுவதைப் பார்த்து மாறுவது, மருத்துவக்  காரணங்களுக்கு, மற்றவர்களின் அறிவுரை. இதுல நீங்க மூனாவது.” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே திருக்குறளின் அட்டையை விலக்கி முதல் பக்கத்தைப் புரட்டி பெயரைப் பார்த்தான் அருள். “மூங்கில்”னு ஒரு பெயரா என வியந்தான் அருள் இராயப்பன்.


செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.


மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.



=========================================================================


Friday, January 17, 2020

அருள் இராயப்பன்- பலிக்குழி






அருள் இராயப்பன், நீங்களா! பாவ மன்னிப்பு கேக்கவா வந்துருக்கீங்க?” வியந்தார் தேவாலய பாவ மன்னிப்பு கூண்டில் இருக்கும் பாதர்.

"சாமியார்களும் பாவத்துக்கு அப்பாற்பட்டவங்க இல்லயே, ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்யச்சொல்லுதே வேதம்" என்றான் பாவமன்னிப்பு கேட்க வந்த அருள்.

திண்டுக்கல் கரூர் சாலையிலுள்ள இறையியல் கல்லூரியில் இறையியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவன்தான் அருள் இராயப்பன். இந்த ஆண்டுடன் படிப்பு முடிந்து அடுத்து சில ஆண்டுகள் வேறு இடங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி, கோயில்களிலோ வேலை செய்ய காத்துக்கொண்டிருக்கிறான் அருள். கல்லூரிக்குள் இருக்கும் தேவாலயத்தில் பாவ மன்னிப்புக் கேட்க முழங்காலில் நின்று கொண்டிருந்தான் அருள். 
 
சரி சொல்லுங்க அருள் இராயப்பன்.” 

போன வாரம் என் நண்பன் மணிமாறன் வௌவால் வேட்டைக்குப் போனான்.”   
 
"அருள், நீயும் போனியா? உனக்கு துப்பாக்கி சுடத் தெரியுமா?"
 
"இல்ல பாதர்! அவனுக்குத் தெரியும். அவன்தான் சுட்ட வௌவால்கள வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் சமைச்சிக் கொண்டு வந்தான்."
 
". வௌவால் கறி சாப்பிட்டியா?"
 
ஆமாம் பாதர்” என்றான் அருள்.
 
சிறிது நேரம்அங்கே நிலவிய அமைதியை அருள் உடைத்தான்.  

பழம் தின்னி வௌவால் தான் பாதர்! நான் சாப்பிடலாமா கூடாதான்னு எனக்கே குழப்பமா இருந்தபோது குழம்பப் பாத்ததும், நமக்காகத்தான எல்லாம் படைக்கப்பட்டிருக்குனு நல்லாச் சாப்பிட்டுட்டேன். பைபிள்படி வௌவால், கழுகு, ஆந்தையெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு தெரியும். இருந்தாலும் அது யூத இனத்தவருக்குச் சொல்லப்பட்டதுதானே.
நான் செய்தது சரியா தவறான்னு எனக்குத் தெரியல பாதர்
சிறிது இடைவெளி விட்டு 

"தவறென்றால் மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறேன்.என்றான் அருள்.

தப்பா, சரியான்னு போவதற்கு முன்ன, ஒன்னு சொல்லணும் அருள். வௌவால் வாயில நிறைய பாக்டீரியா, வைரஸ் இருக்கும். அதக் கையாளும் போது, நிறைய நம்மைப் பாதிக்க வாய்ப்பிருக்கு. அடுத்த முறை போனா தடுப்பூசி போட்டுட்டுப் போகச் சொல்லு மணிமாறனை. உனக்காக கடவுளிடம் வேண்டுகிறேன் அருள்என்றார் பாதர்

----------------------------------------------------------------------
  "வாடா அருளு, சொன்ன மாதிரி வந்துட்ட. அம்மா வெளிய போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க. துப்பாக்கி ரவையெல்லாம் காலியாயிடுச்சி. குண்டு ரவை செய்யனும், இந்தா இதப்பிடி." மணிமாறன் ஒர் அடி விட்டம் உள்ள  தகர டப்பாவை அருளிடம் கொடுத்தான். மேலே டப்பா வாய் திறந்து இருந்தது. 


அருளிடம், ஒரு ஆணியும், சுத்தியலும் குடுத்து, ' இந்த டப்பா அடி பாகத்தில சின்ன சின்ன ஓட்டை போடு' என்றான் மணிமாறன்.
 
மணிமாறன் எழுந்து போய், ஒரு வாளியில் மாட்டுச் சாணியைக் கரைக்கத் துவங்கினான்.
 
அருளும் மணிமாறனும் சிறுவயது முதல் நண்பர்கள். மணிமாறன்
சென்னையில் பொறியியல் படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கிறான்
மாட்டுச் சாணியைக் கரைத்து முடித்து கையைக் கழுவியதும், அருள் தகர டப்பாவில் ஓட்டை போட்டு முடிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.
 
மணிமாறன், சிறிய சாக்குப்  பையிலிருந்து அடுப்புக்கரி எடுத்து டப்பாக்குள் போட்டு  தீ மூட்டத் துவங்கினான். நல்லா கங்கு கணன்று வந்தவுடன் அலுமினிய காகிதத் தகடுகள் (foil) மற்றும் அலுமினிய துண்டுகளை கங்கில் போட்டான். அலுமினியம் உருகி அடியில் இருக்கும் ஓட்டை வழியே சிறு சிறு குண்டுகளாக வெளியேறியது. கீழே சாணி கரைசலில் விழுந்தவுடன் குளிர்ந்து ரவையாக மாறியது.
 
இந்த ரவைகள் எல்லாம் உயிரப் பறிக்கத்தான?” என்றான் அருள் வருத்தத்துடன்.
 
டேய் மாப்ள! நீ சாமியாரா போனதுக்கப்புறம் ரொம்பப் பேசுறடா. சின்ன வயசுல நம்ம ஸ்கூலுக்குப் பின்னாடி அணிலப்  பிடிச்சி சுட்டுத் தின்னதெல்லாம் மறந்து போச்சா”
 
அது அறியாத வயசு. இப்போ அப்படியில்ல.”
 
கொன்னாப் பாவம் தின்னாப் போச்சு, ரொம்ப வருத்தப்படாத. நீதான அடிக்கடி சொல்லுவே, இந்த உலகத்துல படைக்கப்பட்டதெல்லாம் நமக்காக. பிறகென்ன சீன் போடுற. லூசுல விடு. நாள காலங்காத்தால, பூசை முடிஞ்சு ரெடியா இரு. போனதடவ சொன்ன மாதிரி, கடைசி நேரத்துல பாதர்  கூப்டாரு, ஆட்டுக்குட்டி கூப்டாருன்னு சொன்னா கெட்ட கோவம் வரும்.” எனச் சொல்லும் போதே மணிமாறனின் அம்மா வரும் அரவம் கேட்டது.
 
வாடா அருளு, ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்க, சாப்பிட வாடாஎன வீட்டுக்குள்ளே வரும் போதே வரவேற்றார் மணிமாறனின் அம்மா.
 
இல்லம்மா, சாயந்திர பூசைக்குள்ள போயிடனும்.” 
ஆமா, உங்க மதத்துலதான் சாமியாருங்க கண்ணாலம் பண்ணமாட்டாய்ங்களாமே. எப்படி உங்க வீட்டுல விட்டாங்க.என்றார் ஆர்வமாக
இல்லமா இது என்னோட விருப்பந்தான். வீட்டுக்கு ஒருவர், ஆணோ பொண்ணோ கடவுளுக்கு சேவை பண்ணப்போனா மகிழ்ச்சிதான், எங்க வீட்ல.என விளக்கினான் அருள்
மணிமாறன் சிரிப்பதை ஓரக்கண்ணால் பார்க்கத் தவறவில்லை அருள்.
 
“What so funny?“ என்றான் அருள்.
 
“You know what, God business is always profitable, in all religion” என சொல்லிச் சிரித்தான் மணிமாறன்.
 
அதை businessசா பாக்கிறவங்களுக்கு. நான் சேவையா பாக்குறேன். படிப்பு முடிந்ததும், வேறு இடத்திற்கு சேவை செய்யப் போகனும். நான் இன்னும் நாலு மாசத்துல பப்புவா நியூகினியா நாட்டுக்கு போகப் போறேன். இது மாதிரிதான் அன்னை தெரசா சின்னவயசுல இங்க வந்தது.என்றான் அருள்
டேய் என்னடா சொல்ற. எப்படா திரும்பி வருவ. வேற எங்கேயாவது பக்கத்துல போலாம்ல.”
 
இல்லடா.அது வந்து ..”
 
ஆமா, இந்த பப்புவா நியூகினியாலதான நம்ம சிவகாசிகாரர் கவர்னரா இருக்கார்? டேய் அருளுநீ அங்க போய் அரசியல்ல குதிக்கிற, அதிபர் ஆகுற. எனக்கு ரெண்டு காண்ராக்ட் குடுக்குற. எப்பூடி?” என உற்சாகமானான் மணிமாறன்.
 
மணிமாறனின் அம்மா குறுக்கிட்டு,
டேய் மாறா சும்மா இர்ரா, அருளு அடுத்த வாரம் நம்ம ஊர் கோயில்ல அம்மன் கொடை. கண்டிப்பா நீயும் வரனும். இந்த தடவ நடக்குற கொடை ரொம்ப விசேசம். புது வீடு கட்னதுக்கு நாங்க ஒரு கடா நேந்து விட்டிருக்கிறோம். ஏழு வருசத்துக்கு ஒரு முறை நடக்கிற கொடை. போன தடவ நீங்கெல்லாம் சின்னப் பய. அதனால கூட்டிட்டுப் போகல. கண்டிப்பா வரணும்டா. கடா பிரியாணி கண்டிப்பா இருக்கும்.” 
சரிம்மா கண்டிப்பா வர்றேன். பப்புவா நியூகினியால இருந்து ஒருவர் இங்கு வந்திருக்கார். நான் அவருக்கு நம்ம நாட்டப் பத்தி பாடம் எடுக்கணும், அவர் அங்குள்ள மொழி, இனம், உணவு, கலாச்சாரம், பண்பாடு பத்தி எனக்கு பாடம் எடுப்பார். ஒருவேளை அவரையும் கூட்டிட்டு வருவேன், பரவாயில்லையா?” எனக் கூறி பதிலை எதிர்பார்த்தான் அருள்.
 
கண்டிப்பா கூட்டிட்டு வா” என்றார் அம்மா.
 
வா வா, வரும்போது மப்டில வா. இந்த மாதிரி வெள்ளப் பாவாடைல வந்துறாத” என்றான் மணிமாறன்.
 
----------------------------------------------------------------------
 
மணிமாறன் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். அருகில் அருள். பின் இருக்கையில் பப்புவா நியூகினியாவிலிருந்து வந்திருந்த புது சாமியார் ரோனி.
 
டேய் அருள், நீ சாமியாராப் போனதும் போன, நாம டாப் அடிக்கிற இடத்துக்கெல்லாம் வர்ரதில்ல. ஒரே ஒரு தடவ திராட்சரசம் கொண்டு வந்த. அதக்கூட இப்பக் கண்ல காட்றதில்ல. டேய் அருளு, நான் பேசிட்டே இருக்கேன், நீ என்ன நினைப்புல இருக்க.” என முழங்கையை வைத்து லேசாக இடித்தான்.
 
போடா! முன்னாடிப் பாத்து ஓட்டுஎன்று கூறி ரோனியிடம் இங்குள்ள மக்களைப் பற்றி விவரிக்கத் துவங்கினான் அருள்.
 
செல்லமந்தாடி பாலத்தைக் கடந்து போய்கொண்டிருந்த வண்டி வலதுபுறம் சிறிய சாலையில் இறங்கியது. மக்கள் நடந்தும் வண்டியில் போவதுமாக இருந்தார்கள்.
 
சிலபேர், சின்னக் குழுவாக தலையில் முளைப்பாரியுடன் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். சிலர் தீச்சட்டி எடுத்துக்கொண்டு போய் கொண்டிருந்தார்கள். அடிக்கடி குலவை சத்தம் கொடுத்துக்கொண்டே நடந்தது அருகில் திருவிழா நடப்பதைப் பறை சாற்றியது.
 
இனி வண்டில போகமுடியாது, நடைதான்.எனக் கூறிய மணிமாறன் வண்டியை ஓரமாக நிறுத்தினான். மூவரும் இறங்கி நடக்கத் துவங்கினார்கள். காரின் பின்னால் இருந்து மூன்று பைகளை எடுத்து, ஆளுக்கொரு பையை கையில் கொடுத்தான் மணிமாறன். அவர்கள் இது என்ன என்று கேட்கும் முன்னே "இதுலே உப்பு இருக்கு, கோயிலுக்கு போனதும் நீங்களே தெரிஞ்சுக்குவீங்க” என்றான்.
 
மணிமாறன் ரோனியிடம் திருவிழாவைப் பற்றி சொல்லிக்கொண்டு வந்தான்.
 
ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தத் திருவிழா நாலு நாட்கள் நடக்கும். ஒவ்வொருநாள் இரவும் ஆடல்கள், பாடல்கள், சிலம்பு ஆட்டம் நடக்கும். எருமை கிடா வெட்டுதலும், சேவல் சண்டையும் ரொம்பச் சிறப்பு. தெய்வத்தின் பெயர், மண்டு காளியம்மன். வரலாறுன்னு ஒன்னுமில்ல. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இருந்தே இந்த பழக்கம் இருக்கிறதுன்னு சொல்றாங்க. நினைத்தது நடந்து விட்டாலோ, இல்ல, வேண்டுதலாகவோ காளியம்மனுக்கு எருமை கிடாவை நேர்த்தி கடனாக கோவிலுக்கு முன்பு கொண்டு வந்து குளிப்பாட்டி, மாலையிட்டு அவிழ்த்து விட்டு விடுவாங்க. அந்த மாதிரியான எருமை கன்று குட்டிகள் சுமார் 50 முதல் 80 வரை சேர்ந்துடும். குளம், காடு, தோட்டங்களில் அவை கிடைச்சத சாப்ட்டுக் கிடக்கும். திருவிழா சமயத்தில அதனை ஊர்மக்கள் ஒன்னு எருமை கிடாக்களை பிடிச்சிட்டு வந்து சாமிக்கு பலி கொடுப்பாங்க. தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்ததுன்னு இந்தப்பகுதி மக்களோட திடமான நம்பிக்கை. எங்களுக்கும்தான்.என ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டே நடந்தான்
 
உங்க நாட்டுல இது மாதிரி பலி கொடுக்குறது இருக்கா
சிறிய புன்முறுவலுடன், “ஆதிக்குடிகள் இருக்கும் எல்லாக் கலாச்சாரத்திலும் பலியிடுதல் இருக்கும்.என்று அளந்துப் பேசினான் ரோனி.
 
சின்னஞ்சிறு இணையர்கள் கைகோர்த்து போவதைப்  பார்த்த அருள், மணிமாறனைப் பார்க்க, “கண்டிப்பா ஊருக்குள்ள ஒன்றிரண்டு காதல் ஜோடிகள் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வதும் நடக்கும். பாவம்டா நீ! ஒரு பொண்ணு பிடிச்சுருந்தாலும் உன்னால ஒன்னும் செய்ய முடியாது. என்னமோ போடாஎன அலுத்துக்கொண்டான் மணிமாறன்.
 
இந்த சமய துறவ விட்டு வெளியே வந்துட்டு கல்யாணம் பண்ணலாம். அதுக்குலாம் வசதி பண்ணி கொடுத்திருக்காங்கஎன்றான் அருள் சிரித்தபடி.
 
பார்றா, இப்படியும் உனக்கு ஆச இருக்கா?” எனக்  கிண்டலடித்தான் மணிமாறன்.
 
ஊரை நெருங்க நெருங்க, துர்நாற்றம் அடிக்கத் துவங்கியது. ரோனியும், அருளும் முகம் சுளித்தார்கள். இதைக் கவனித்த மணிமாறன் "போகப் போக சரியாகிடும்" என்றான்.
 
சொன்ன மாதிரி துர்நாற்றம் பழகியது. அருகிலுள்ள மைதானத்தில் ஒயிலாட்டம் ஆடிக்கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கோயிலில் இருந்த ஒலிபெருக்கி கடாவெட்டு துவங்கப் போவதாக அலறியது.
 
முதல் கடா "சக்தி கடா" எங்க அப்பாதான் பிடிச்சிக் குடுக்கணும், சீக்கிரம் போவோம்” என அவசரப்படுத்தினான் மணிமாறன்.  
கோயிலை நோக்கி நடந்தார்கள் மூவரும். கோயிலின் முன்பாக முப்பதுக்கு முப்பது அடி அளவுல பெரிய குழி. எப்படியும் அந்தக் குழி இருபது அடி ஆழம் இருக்கும். வெளியிலிருந்து குழிக்குள் சிலபேர் உப்பைக்  கொட்டிக்கொண்டிருந்தார்கள்.
 
இது என்னக்  குழி?” என்ற ரோனிக்கு விளக்கம் கூறினான் மணிமாறன். 

எருமை மாட்டை பலி கொடுத்து இந்தக் குழிலதான் போட்டு மூடுவாங்க. போனத் திருவிழால பலிகொடுத்து மூடிய குழிய இந்தத்
திருவிழாவுக்குத் தோண்டியிருகிறாங்க.

 ஏன் ஊர் முழுவதும் துர்நாற்றம் அடிக்குதென்று இப்போ விளங்கியது இருவருக்கும். கூட்ட நெரிசலில் மணிமாறன், அருளையும் ரோனியையும் பலி மேடைக்கு அருகே அழைத்துச் சென்றான். பலிமேடை என்று எதுவும் சிறப்பாக இல்லை. அந்த இடம், அந்தக்காலத்தில் கிணற்றில் தண்ணீர் இறைக்க இரண்டு கற்பலகைகள் கிணற்று முனையில் துருத்திக் கொண்டிருப்பது போல அந்த மேடையில் இரண்டு  கற்பலகைகள் குழி முனையில் துருத்திக்கொண்டிருந்தது. இரண்டு பேர்கள் கையில் பெரிய அரிவாளுடன் எதிரெதிரே நின்றுகொண்டிருந்தார்கள்.
 
முதல் எருமைக் கடாவை மணிமாறனின் அப்பா ஒருவரிடம் மிகப்  பவ்யமாக பிடித்துக் கொடுத்தார். எருமை 'ம்மா' என அலறியது. பாதி அலறும்போதே ஒரே வெட்டில் தலை துண்டிக்கப்பட்டது. இதுவரை ஒரு உயிரை எடுப்பதை இவ்வளவு அருகிலிருந்து பார்த்தது கிடையாது அருளுக்கு. மாட்டின் தலை தனியாக குழிக்குள் விழுந்தது. அந்த மேடை முழுவதும் எருமை மாட்டின் ரத்தம்.
 
அருளுக்கு குருதியைப் பார்த்ததும் தலைச் சுற்றியது. அருளின் வெள்ளைச் சட்டையிலும் குருதி. மெதுவாக நினைவு தப்புவதுபோல் இருந்தது. இதைக் கவனித்த மணிமாறன் கைத்தாங்கலாக அவனைப் பிடித்து மேடையைவிட்டு வெளியே அழைத்து வந்தான். குழியின் முனையில் அமரவைத்தான் மணிமாறன். அடுத்த எருமை மேடையில் நின்றிருந்தது. இந்த முறை நன்கு வளர்ந்த பெரிய எருமை. இரண்டு பேரும் மாறிமாறி எருமையின் கழுத்தை வெட்டிக்கொண்டே இருந்தார்கள். எருமையின் அலறல், உறுமி மேளம், கொட்டுச் சத்தத்தைத் தாண்டி, அது சுற்றித்திரிந்த பகுதியில் கரைந்தது. சிறிது நேரத்தில் பல வெட்டுக்களுக்குப்பின் எருமையின் தலை தனியாக குழியில் விழுந்தது. நாலைந்து பேர் தலையில்லா எருமை உடலை குழியினுள் தள்ளிவிட்டார்கள்.
 
குழிக்குள் இருந்து வந்த துர்நாற்றம், எருமைகளின் அலறல், எருமைகளின் தலையற்ற உடல்கள், குருதிஉறுமி மேளம் கொட்டுச் சத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து அருளை அங்கு இருக்கவிடாமல் செய்தது. மெதுவாக எழுந்து கூட்டத்தை விட்டு விலகி ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தான். ரோனி, எந்தவித சலனமும் இல்லாமல் மக்களைக்  கவனித்துக்கொண்டிருந்தான்.
 
மணிமாறன், அருள் கையிலிருந்த உப்பு பொட்டலத்தைப் பிரித்து குழிக்குள் கொட்டி விட்டு அருளிடம் தண்ணீர் பாட்டிலுடன் வந்தான்.
 
டேய் மாப்ள! நீ சாமியாடிருவியோன்னு பயந்துட்டேன்டா. நினைச்சுப்பாரு, 'அம்மன் திருவிழாவில் சாமியாடிய தேவாலயத்தில் பூசை செய்யும் பாதிரியார்' நியூஸ்ல வந்தா எப்படியிருக்கும்  என்று சொல்லி பலமாகச் சிரித்தான் மணிமாறன்.
 
ஏண்டா! எங்கேயாவது சாமிக்கு பூஜை பண்றவர் சாமியாடிப் பாத்துருக்கியா? இல்ல, அலகு குத்தி, காவடி எடுக்குறதப் பாத்திருக்கியா?. போடா! போய் ரோனியப் பாத்து கூட்டிட்டு வா. தொலஞ்சிடப்போறான்.
 
சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மணிமாறன் வீட்டுக்குச் சாப்பிட கிளம்பினார்கள் மூவரும்.
 
போகும் வழியில் குழியைப்  பார்த்தான் அருள். சுமார் 50 எருமை மாடுகள் தலையில்லாமல் கிடந்தது. குழிக்குள் சிலபேர் தலையை ஒருபக்கமும், உடல்களை ஒரு பக்கமும் கயிறு கட்டி நகர்த்திக்கொண்டிருந்தனர். அவர்கள் உடம்பு முழுதும் மாட்டுக் குருதியால் நனைந்து இருந்தது. அருள் மனம் சலனப்பட்டு இருந்தது.
 
அருளுக்குப் பசித்தாலும் சாப்பிடப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவனுக்காக சமைக்கப்பட்ட உணவுகளை வீணாக்க விரும்பவில்லை.
 
சீரகச் சம்பா வெள்ளாட்டு பிரியாணி பரிமாறப்பட்டது. அதில் இருக்கும் கறியைப் பார்த்ததும் பலி குழி ஞாபகம் வருவதைத் தடுக்க முடியவில்லை. தலையில்லாத மாடு, 'ம்மா' என மாட்டின் அடிவயிற்றிலிருந்து வரும் சத்தம், மாட்டுக் குருதி, துர்நாற்றம், உறுமி மேளம், கொட்டுச் சத்தம், சட்டையில் குருதி, மறுபடியும் குழி.
 
தின்பவனுக்கு பாவம்  இல்லை, கொலைப் பாவம் கொலை செய்தவருக்கே போய்ச் சேரும் என்றே சிறுவயதிலிருந்தே சொல்லப்பட்ட அருளுக்கு முதல் முறையாக கறியில் கை வைக்கத் துணிவில்லாமல் போனது.
 
 
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு
 
உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது. புலால் உண்ணாதவர்கள் இருப்பதால் பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.
----------------------------------------------------------------------