Sunday, September 2, 2007

சவுதியில் நாய் கறி - சவுதி ஆட்டம்-4

யான்பு பாலைவனத்தில் கோடையில் மிகவும் கடுமையான வெயில். சிவகாசிகாரனுக்கு வெயில் ஒன்றுமில்லைதான். ஆனால் வெயிலுடன் சில நேரம் பாலைவன புயல் அடிக்கும் போதுதான் மரண வேதனை. பகல் வேளையில் முன்னால் பத்தடி தூரம் தான் தெரியும். எங்கும் Brown கலர் மணல் மயம். உடம்பில் ஒரு இடம் கூட வெளியே தெரியாது. கண்ணுக்கு கண்ணாடி. தலை, காது, கழுத்துக்கு அரபியர்கள் அணியும் 'கேஃபியா' ( Keffiyah - head scarf ) வை சுற்றியிருந்தாலும் வாயில் மண் நறநறக்கும். மூக்கு, காதுக்குள் இருக்கும் மண்ணை வைத்து வீடு கட்டிவிடலாம். இந்த இயற்கை சீற்றத்தை சமாளிக்க ஏற்ற உடையைதான் அரபியர்கள் அணிகிறார்கள் என்பது என் எண்ணம். மேலிருந்து கீழே வரை பட்டன் இல்லாத ஒற்றை ஆடை. தலைக்கு ஒரு துணி. அதை தலையோடு பிடித்து வைக்க ஒரு வட்டு. தொழுகைக்கு செல்லுமுன் காது, மூக்கு கழுவுவது பாலைவன புயலால்தான் என்பது என் எண்ணம்.

நிறைய பிலிப்பினோ மக்கள் பழக்கமானார்கள். வார விடுமுறை நாளில் ஒரு நாள் என்னிடம் வந்து ' சீனி, கடலில் மீன் பிடிக்க போகிறோம் வருகிறாயா? ' என்றார்கள். எனக்கு கடலில் மீன் பிடிக்கத் தெரியாதே!! என்றேன்.சும்மா வா! கடலில் குளிக்கலாம், சாயங்காலம் camp fire இருக்கும், நல்ல வேடிக்கையாக இருக்கும் என்றார்கள். நானும் அவர்களுடன் கடலுக்குச் சென்றேன்.

எனக்கு தெரிந்த கடல், ராமேஸ்வரம் கடல் மட்டுமே। கல்லூரி நாட்களில் ஒரு தடவை "பாடு" க்கு சாவக்கட்டி என்ற அந்தோணியுடன் சென்றிருக்கிறேன். சாவக்கட்டி மீனவராக வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்பு கடத்தல் தொழிலில் ஈடுபட்டு 'உள்ளே வெளியே' என்றிருந்தார். பின்பு திருந்தி வாழ்ந்து ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார் சமீபத்தில். அவருடன் ஒரு இரவை கடலில் கழித்ததில் புதிய அனுபவம். எங்கு பார்த்தாலும் இருட்டு. தூரத்தில் சில வெளிச்ச புள்ளிகளை காண்பித்து ' அதுதான் இலங்கை' என்றார். வலையை கடலில் போட்டு மணிக்கணக்காக கடலை அரித்து எடுப்பார்கள். அது ஒரு பாடு. ஆக மொத்தம் ஒரு இரவுக்கு இரண்டு பாடுதான். பிடித்த மீனை சூடாக உள்ள எஞ்சின் exhaust குழாயில் வேக வைத்து உப்பு, மிளகாய் பொடி போட்டு சாப்பிட்டது நல்ல அனுபவம்.


பிலிப்பினோக்கள் எட்டு பேர், நானும் என் அறை நண்பர் ஜோசப் மற்றும் ஒரு கொழு கொழு நாய்.முதன் முதலில் வித்தியாசமான தூண்டில்களைப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த கடற்கரை அல்ல. நிழலில் ஒதுங்க இடம் கிடையாது. கண்ணுக்கெட்டியவரை யாரும் இல்லை. வெயில் 45 டிகிரி செல்சியஸ். மீன் பிடித்து எதுவும் சேர்காமல் சுட்டு ' சாப்பிடு, சாப்பிடு' என்றார்கள். ஏண்டா வந்தோம் என்றாகிவிட்டது. சாயங்காலம் ஆனது. ஆட்டம் ஆரம்பமானது.

முதலில் விறகு போட்டு தீ மூட்டினார்கள். ஒரு கூட்டம் தனியாக ஒதுங்கியது. இன்னொரு கூட்டத்தில் நான். Campல் தயாரித்த சாராயத்தைக் பெப்சியில் கலந்து கொண்டு வந்திருந்தார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன். பெப்சி குடித்துக் கொண்டே தீ மூட்டினார்கள். ஒரு மணி நேரம் கழித்து தனியாக போன கூட்டம் திரும்பியது. கையில் ஒரு கோணிப்பை. முதலில் எதுவும் புரியவில்லை. அவர்களுக்குள் தகாலுவில்(பிலிப்பினோ மொழி) பேசி சிரித்துக்கொண்டார்கள். கோணியை திறந்து தோல் உரித்த நாயை வெளியே எடுத்து போட்டார்கள்.

அதன்பிறகு நடந்தது என் வயிற்றைப் பிறட்டியது. நாயின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதி வெற்றிடத்தில் அரிசியை போட்டு அடைத்து நூல் போட்டு தைத்து விட்டார்கள். தலையில்லாத நாயை camp fireல் சுட ஆரம்பித்தார்கள். என் வயிற்றை சரி செய்ய நானும் கொஞ்சம் 'பெப்சி' குடித்துக் கொண்டேன். கொழுப்புடன் சேர்ந்து அரிசி வெந்து சோறாக மாறியதை எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். நாய் கறி ரெடி. நானும் கொஞ்சம் ருசி பார்த்தேன். தண்ணி உள்ளே போன பின்பு நாயாவது பேயாவது.. நன்றாக இருந்தது. சவுதியில் நாய் சாப்பிட்ட அனுபவம் பின்பு கொரியாவில் இருந்தபோது கை கொடுத்தது.சவுதியில் alcohol , நாய் சாப்பிடுவது "ஹராம்" (பாவம்). பிடித்தால் கடுமையான தண்டனை. செய்யக் கூடாததை செய்து பார்ப்பதுதான் thrill.. (மாட்டாதவரை).


சவுதி ஆட்டம் தொடரும்....