Friday, September 19, 2008

பஹ்ரைன் காவல் நிலையம்

பஹ்ரைன் போலீஸை பார்த்ததும் தூக்க கலக்கத்திலிருந்த எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. நான் முழிப்பதைப் பார்த்து இந்தியில் கூறினார்கள். எனக்கு மேலும் குழப்பம். எப்படி பஹ்ரைன் போலீஸ் இந்தி பேசுவார்கள்? பின்பு தான் தெரிந்தது பஹ்ரைன் காவல் துறையில் பாதிபேர் பச்சைகள் ( பச்சை என்றால் பாகிஸ்தான் நாட்டவர்).

' குச் ப்ராப்ளம் நஹி, ஹம்கோ சாத் ஆஜாவ்' என்றார்கள். ( எதுவும் பிரச்சனை இல்லை, எங்களுடன் வா)
நானும் பாஸ்கரும் இரண்டு போலீஸ்காரர்களுடன் அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்றோம். வெளியே நண்பர் சசியும் மற்றொரு போலீஸும் இருந்தார்கள். வெளியே உட்கார்ந்திருந்த போலீஸ் நம்ம ஊர் ஏட்டையா மாதிரி இருந்தார் பெருத்த தொப்பையுடன்.

" ஹாத் மிலாவ், ஹாத் மிலாவ்" என்று எங்களைப் பார்த்து இந்தியில் கூறினார். கை கொடுத்துக் கொள்ளுங்கள் எல்லோரும் ஒரே நாட்டவர்கள். ஏன் அடித்துக் கொள்ள வேண்டும். சமாதானமாய் போய்விடுங்கள். கை கொடுத்துக் கொள்ளுங்கள் என்றார். ' நீங்கள் அரபிகாரனை அடித்திருந்தால் தான் பிரச்சனை ( அது என்ன கணக்கோ !!!!!!) உங்களுக்குள் என்றால் ஒன்றுமில்லை. என்றார். நானும் பாஸ்கரும் அமைதியாக இருந்தோம். சசி " முடியாது, வழக்கு பதிவு பண்ணியே தீருவேன்" என்றான்.

ஏட்டையா பஞ்சாயத்து பண்ண முயன்றார். பிராது கொடுத்தவன் (சசி) ஒத்து வரவில்லை என்றதால் எங்களை காவல் நிலையத்த்ற்குள்ளே அனுப்பினார்.
உள்ளே காவல் துறை ஆய்வாளர் , சூடான் நாட்டவர், கறுப்பர், மெலிவாக இருந்தார். வேறொருவருடன் பேசிக் கொண்டிருந்தவர் எங்களைப் பார்த்ததும் , அருகில் இருந்த அறையை காண்பித்து " அமர்ந்து பேசி முடித்துக் கொள்ளுங்கள்" என்றார்.

அது ஒரு கூடி விவாதிக்கும் அறை ( conference hall). சசியும் நாங்களும் எதிரெதிரே அமர்ந்தோம். நான் தான் முத்லில் பேச ஆரம்பித்தேன். விட்டுக் கொடுக்காமல் பேசினேன். " இதோ பார் சசி, வழக்கு பதிவு செய்தால், உன்னையும் சேர்த்துதான் ஊருக்கு அனுப்பி விடுவார்கள். எனக்கு ஒன்றுமில்லை, இது எனக்கு மூன்றாவது நாடு, ஏழாவது வேலை (company). நான் உடனே வேலை தேடிக் கொள்வேன். உன்னைப் பற்றி நினைத்துக் கொள். வழக்கு பதிவு பண்ணவா வேண்டாமா என்று நீயே முடிவு பண்ணிக் கொள்" என்றேன்.

பாஸ்கர் கொஞ்சம் இறங்கி வந்து பேசினான். (Good cop, Bad cop)
எதற்கும் சசி ஒத்து வரவில்லை. " வழக்கு பதிவு பண்ணியே தீருவேன் ' என்று பிடிவாதமாய் இருந்ததினால் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையும் முறிந்தது.

மூவரும் ஆய்வாளரிடம் சென்றோம். அவருடைய பஞ்சாயத்தும் எடுபடவில்லை. வேறு வழியின்றி வழக்கு பதிவு பண்ண ஆரம்பித்தார். அப்போதுதான் எங்களைப் பற்றி விசாரித்தார். எந்த நாடு என்றார். கூறினோம். எந்த ஊர் என்றார். கூறினோம். " நீங்கள் விடுதலை புலிகள் இல்லீயே" என்றார். சிரித்துக் கொண்டோம். கொஞ்சம் அறிவுரை கூறினார். மூன்று பேரும் படித்தவர்கள், பொறியாளர்கள், ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே இனம், ஒரே மொழி, பின்பு ஏன் அடித்துக் கொள்கிறீர்கள். என்றார்.

நம்ம யாரு, சேர, சோழ, பாண்டிய வம்சமாயிற்றே, அவருக்கென்ன தெரியும் தமிழர்கள் அவர்களுக்குள்ளே அடித்துக் கொள்வார்கள் என்று.

ஒரு வழியாக காலை 5 மணிக்கு ரிஃபா (Rifa) காவல் நிலையத்தில் எங்கள் மேல் வழக்கு பதிவு செய்து விட்டார்கள்.

காலை 9 மணிக்கு மனாமா (பஹ்ரைன் தலை நகர்) நீதிமன்றத்தில் ஆஜராகுங்கள் என்றார் காவல் துறை ஆய்வாளர்.

ஆட்டம் தொடரும்......

Wednesday, September 10, 2008

பஹ்ரைன் ஆட்டம்

பஹ்ரைனிலும் ஒரு ஆட்டம்

சிவகாசியில் ஒரு மாதம் தங்கி விட்டு விக்ரமாதித்தனாக மறுபடியும் மும்பை வந்தேன் வேலை தேட. மும்பையில் வேலை செய்ய / வேலை தேட முயற்சிக்க வில்லை. வெளிநாட்டு மோகத்தின் வடு ஆறாமல் இருந்தது, விரலிலிருந்த காயமும்தான். நான்கு மாதம் மும்பையில் தங்கி வேலை தேடினேன். இடையில் செம்பூரில் நடந்த S.V. சேகர் நாடகம் பார்க்கச் சென்ற இடத்தில் என் பழைய பாஸ் பழைய வேலைக்கு அழைத்தார். பிடிவாதமாக மறுத்து விட்டேன். ஒரு வழியாக பஹ்ரைனில் வேலை கிடைத்தது. மாதம் 300 தினார் சம்பளம். சவுதியைவிட இருமடங்கு. உடனே ஒத்துக்கொண்டேன். ஒரு நாள் சாயங்காலம் நண்பர்கள் புடைசூழ என்னை வழியனுப்பி வைத்தார்கள். மனாமா விமான நிலையத்திற்கு வந்தடைந்தேன். கடவுச்சீட்டு சோதனை பண்ணும் இடத்தில் என்னை தடுத்து நிறுத்திவிட்டார்கள். என் விசா அவர்களுடைய கனிணியில் இல்லையாம். என் கடவுச்சீட்டில் இருக்கிறதே என்றேன். நான் வேலை பார்க்க போகும் கம்பெனி என் விசா எண்ணை அவர்களுக்கு தெரியப்படுத்தனுமாம். மனித வள மேலாளருடன் தொலைபேசியில் பேசினேன். விமான நிலையத்தில் இரவு தங்குங்கள், காலையில் வெளியே கொண்டுவருகிறேன் என்றார். என்னைப் போலவே பிரதாப் என்பவரும் இருந்தார். இருவரும் ஒரே கம்பெனியில் வேலைக்கு வந்திருந்தோம்.

விமான நிலையத்திற்குள் உள்ள தங்கும் விடுதியில் மணிக்கணக்கில் தான் வாடகை, நாள் கணக்கு அல்ல. ஆறுமணி நேரம் தங்கினோம். காலை மனித வள மேலாளர் எங்களை வெளியே கொண்டுவந்தார். வேலை பிடித்திருந்தது. ஒரே மாதத்தில் என் நண்பன் பாஸ்கரை நான் வேலை செய்யும் கம்பெனியில் கொண்டு வந்தேன் ( மனித வள மேலாளருக்கு கொஞ்சம் பரிசு பொருட்கள் கொடுக்க வேண்டியிருந்தது). வாழ்க்கை பயணம் நன்றாக போய்கொண்டிருந்தது. நான் தங்கியிருந்த வீட்டில் நான், பாஸ்கர், ப்ரதாப் மற்றும் சசி. ப்ரதாப் மிக நன்றாக சமைப்பார். அவருக்கு நான் தான் எடுபிடி. அவரிடம் தான் நான் சமையல் கற்றுக்கொண்டேன். கல்லூரியில் இருந்த பாஸ்கருக்கும், தற்சம பாஸ்கருக்கும் நிறைய மாற்றங்கள். எப்போதும் தியானம் தான். சசிக்கும் எனக்கும் கொஞ்சம் ஒத்துப்போகவில்லை. பேசுவதையே நிறுத்தியிருந்தேன். இவ்வாறாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த ஒரு நாள், வீட்டில் பார்ட்டி. படுக்க போகும் போது மணி 1. சொந்தகாரர் வீட்டிற்கு சென்று விட்டார் ப்ரதாப். வெளியே சென்ற் சசி அதுவரை வீடு திரும்பவில்லை. நான் தெரியாமல் கதவில் உள் தாழ்ப்பாள் போட்டு விட்டு தூங்கிவிட்டேன். நண்பர் சசி இரவு 2 மணிக்கு வீடு திரும்பியிருக்கிறார். வீடு பூட்டியிருக்கிறது. தட்டியிருக்கிறார் பலமாக. பக்கத்து அரபிகாரன் விழித்தெழுந்து சசியுடன் சேர்ந்து தட்டியிருக்கிறார்கள். நாங்கள்தான் நன்றாக தூங்கிவிடோமே!!!

கடைசியில் இரண்டுபேரும் சேர்ந்து பலமாக கதவில் மோதி தாழ்ப்பாளை உடைத்து உள்ளே வந்துவிட்டார்கள். ஆத்திரத்தில் உள்ளே வந்த சசி, பாஸ்கர் அறைக்குச் சென்று தூக்கத்தில் இருந்தவனின் பனியனை பிடித்துத் தூக்கி உலுப்பி " ஏம்லே வீட்டைப் பூட்டினாய்" என் திட்டியிருக்கிறான். பாஸ்கருக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த களேபரத்தில் என் தூக்கம் கலைந்து அறையை விட்டு வெளியே வந்தேன். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.சசி கோபத்தில் கத்திக்கொண்டிருக்கிறான், அருகில் அரபிகாரன்.

" நீயாலே பூட்டினது" என்றான்.
"ஆமாம்" என்றேன்.

கெட்ட வார்த்தையில் திட்டினான். நான் அமைதியாயிருந்ததைப் பார்த்து, கோபத்தில் திட்டிக்கொண்டே கையிலிருந்த உடைந்த தாழ்ப்பாளை என் மேல் விட்டெரிந்தான். உடைந்த தாழ்ப்பாள் என் வயிற்றை பதம் பார்த்தது. சுலபமாக கோபப்படாத என்னை அவன் செயல் கோபப் படுத்தியது. ஒரு உதை விட்டேன். Washing machine மேல் சென்று விழுந்தான். அரபிகாரன் தலை தெறிக்க ஓடி விட்டான். விழுந்து எழுந்தவனை பிரித்து மேய்ந்து விட்டோம் நானும் பாஸ்கரும். வீட்டிற்கு வெளியே ஓடினவனை விரட்டிச் சென்று அடித்த பாஸ்கரை நான் தான் கட்டுப்படுத்தி வீட்டிற்குள் இழுத்து வர வேண்டியிருந்தது. எல்லா களேபரங்களும் முடிந்து அவரவர் அறைக்கு தூங்க சென்றோம். எனக்கோ தூக்கம் வரவில்லை. ஏன் இவ்வாறு நடந்து கொண்டேன்? என்னை நினைத்து எனக்கே வெறுப்பாக இருந்தது. சாதாரணமாக எனக்கு கோபம் வராது. மனிதனை மனிதனாக மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவன். இதே போன்ற ஒரு சம்பவம் மும்பையில் இருந்த போதும் நடந்தது.

என் நண்பன் மூர்த்தி, திருப்பதியை சேர்ந்தவன். பத்து வரை படிப்பு. மும்பை கிழக்கு முலூண்ட் வாசம். வெளிநாட்டு பொருட்கள் crawford market ல் இருந்து வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்பது தான் தொழில். அதற்கு முன் என் அக்காவுடைய "Dorai Classes"ல் assistant வேலை. அதிலிருந்து எனக்கு மட்டுமல்ல என்னுடன் இருந்த கல்லூரி நண்பர்கள் ( மாலவன், ஜாக்ஸன், பாஸ், பூஸ், கஞ்சா சரவணன், பூபதி, .........) எல்லோருக்கும் நண்பன். தெலுங்கு, தமிழ், இந்தி, ஆங்கிலம அத்துப்படி. கொஞ்சம் மராட்டியும். மூர்த்தியுடன் ஒரு மாலை பொழுது அடிக்கடி செல்லும் தேநீர் விடுதியில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒருவன் மூர்த்தியிடம்
" க்யா மூர்த்தி மேரா திமாக் கராப் கர்த்தா ஹய்" என்றான். ( என்ன மூர்த்தி என்னை கோபப்படுதுகிறாய்)
அதற்கு மூர்த்தி பதில் சொல்லிக் கொண்டிருந்தான். பிரச்சனை இது தான்.

வந்தவன் ஓட்டுநர் உரிமம் வாங்கிக் கொடுக்கும் தரகர். மூர்த்திக்கு உரிமம் வந்துவிட்டது. ஆனால் ரூ 50 பாக்கி தரகருக்கு மூர்த்தி கொடுக்க வேண்டும். தரகர் வரும் போது மூர்த்தியிடம் பணம் இல்லை. மூர்த்தியிடம் பணம் இருக்கும் போது தரகரை பிடிக்க முடியவில்லை. ( கல்லை கண்டால் நாயை காணோம் கதை தான்)
இதை தான் மூர்த்தி விளக்கிக் கொண்டிருந்தான். நான் எதையும் கவனிக்காமல் வேறு ஏதோ சிந்தனையில் இருந்தேன்.

திடீரென்று தரகர் மூர்த்தியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். மறுநொடியில் நான் எழுந்து அவனுடைய வயிற்றில் ஒரு குத்து விட்டேன். கடைக்குள்ளே மல்லாந்து கீழே விழுந்தான். அப்பொழுது தான் கவனித்தேன் அவனுடன் மேலும் இரண்டு பேர் வந்துருந்தார்கள். ஆனால் ஒதுங்கினார்கள். சமாளித்துவிடலாம் என் எண்ணி அடுத்த அடி அடிப்பதற்குள் கடை முதலாளி " அந்தர் நஹி.. பார் ஜாவோ.." (உள்ளே கூடாது.. வெளியே போ) என எல்லோரையும் விரட்டினார். வெளியே வந்தால் மூர்த்திக்கு கோபமாகி திருப்பி அடிக்க ஆரம்பித்தான். நான் அவர்களை விலக்கும் சாக்கில் தரகரை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். மூர்த்தி அடி பின்னிவிட்டான். அவனே அவனை அடித்துக் கொண்டான் தெரியாமல்.

தரகர் என்னிடம் " உஸ்கோ பக்கடோ.. மேற்கோ க்யூம் பக்கட்த்தாஹ" ( அவனை பிடி, என்னை ஏன் பிடிக்கிறாய்) என்றான். ஒரு வழியாய் விலக்கிவிட்டு அனுப்பியாயிற்று.
மூர்த்தியின் நண்பர்கள், ' அடி வாங்கியவன் கோலி (kohli) பெரிய பிரச்சனை வரும் என்றார்கள். உடனே அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்த ரசீதும் வாங்கி விட்டோம். மறுநாள் சமாதானத்திற்கு வந்து விட்டார்கள். அதோடு பிரச்சனை முடிவுக்கு வந்தது.
சண்டையில் எதிராளியை பிடித்துக் கொள்வதும், காவல் நிலையத்தில் முதலில் புகார் கொடுப்பதும் கல்லூரி நாட்களில் கிடைத்த அனுபவங்கள்.

இவ்வாறாக பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே இருந்ததில் எப்போது தூங்கினேன் என தெரியவில்லை. அதிகாலை நான்கு மணி இருக்கும், தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பினார்கள் இரண்டு பேர். " We are Police " என்றார்கள்.

பஹ்ரைன் ஆட்டம் தொடரும்.........