“ப்பா ஈயாப்பர்”
“டேய் அது ஹெலிகாப்டர் டா மவனே, திருப்பி சொல்லுடா. “
“ஈயாப்பர்”
"சரி எப்படியோ சொல்லிட்டு போ".
ஈயாப்பர், ஈயாப்பர் என மேலே பார்த்து கத்திக்கொண்டே
சறுக்கில் விளையாட ஓடினான் என் மகன் எழில். நான்
அருகில் இருக்கும் மர பெஞ்சில் அமர்ந்தேன்.
இந்த நவம்பர் வந்தால் நான் பென்டன்வில் (Bentonville,
Arkansas, USA) வந்து ஒருவருடம் ஆகிறது.
பென்டன்வில், அமெரிக்காவில் "நடு சென்டரில்" இருக்கும் ஒரு சிறு நகரம்.
வால்மார்ட் கம்பெனியின் தலைமைச்செயலகம் இங்குதான் உள்ளது. ஊரில் இருக்கும் ஒவ்வொரு
குடும்பத்திலும் யாராவது ஒருவர் வால்மார்ட்டோடு சம்பந்தப்பட்டிருப்பர். வால்மார்ட்
தகவல் துறையில் மேலாளராக பணியாற்றுகிறேன். இந்த ஊரில் இந்தியர்கள் மிக குறைவு, அதிலும் தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
தினமும் சாயந்திரம் சறுக்கில் விளையாட எழிலை அழைத்து
வந்துவிடுவேன்.
ஊருக்கு நடுவில் இருக்கும் பெரிய பூங்கா. சைக்கிள் ஓட்ட /
ஓட தனி பாதை. அதை விட்டு சற்று தள்ளி, குழந்தைகள் விளையாடுமிடம். வயது, நிற
பேதமில்லாமல் நிறைய குழந்தைகள் சறுக்கில் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
நம்ம ஊரிலும் இப்படித்தான். ஆனால் என்ன ஒன்னு, தன்
பிள்ளைகள் எந்தக் குழந்தையோடு விளையாட வேண்டும் என்று அனேகமாக பெற்றோர்கள்தான்
முடிவு செய்கிறார்கள்.
ஒரு தம்பதியினர் குழந்தையை விளையாட விட்டுட்டு, அவர்கள் கொஞ்சிக்கொண்டிருந்தார்கள்.
இது ஒரு வினோதமான நாடு. வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவைப்
பார்ப்பதற்கும் அமெரிக்காவிற்குள் இருந்து அமெரிக்காவை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
ஊரிலிருந்து கிளம்பும்போது என் சொந்தக்காரர் என்னிடம் , பார்த்து சூதானமா இருப்பூ, காமக்களியாட்டங்கள்
நிறைந்த ஊர் என அறிவுரை கூறினார். பாவம், நிறைய ஆங்கில
படங்கள் பார்த்திருப்பார் போல.
“ப்பா.. இதை லுக் அட் திஸ் காசு”
, என்று ஒரு சென்ட் காசைக் காண்பித்து, என்னிடம் கொடுத்து விட்டு ஓடி விட்டான் எழில், திரும்பவும் விளையாட. கீழே கிடைக்கும் ஒரு காசை பொறுக்காதடா ன்னு
சொல்லியாச்சு. எங்கு பார்த்தாலும் பொறுக்கிவிடுவான், அதில்
என்ன இருக்குமோ தெரியல.
பூங்காவின் ஒருபுறம் கீழே விழுந்த இலைகளை தொழிலாளர் ஒருவர்
காற்று ஊதும் கருவியை வைத்து சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். ஒரு பக்கம்
கொஞ்சம் பேர் நடந்து கொண்டிருந்தார்கள். சில பேர் நாய்களை நடத்திக் கூட்டிட்டு
போய் கொண்டிருந்தார்கள். நாயுடன் இருந்த ஒரு வெள்ளைக்காரர் கீழே குனிந்து மணலை
அள்ளித் தன் நாய் இருந்து வைத்த கக்கா மேல் போட்டு கொட்டி, நாய் மலத்தை அள்ளிக்கொண்டிருந்தார், பிளாஸ்டிக்
பையில்.
இதைப் பார்த்தபோது என் மனம் பழைய நினைவுகளை அசை போடத் துவங்கியது.
அந்த காலத்தில் 80களில் நிறைய பேர் வீடுகளில் எடுப்பு கக்கூஸ் என்று ஒன்று உண்டு.
இப்போதிருப்பது மாதிரி பிலஷ் கக்கூஸ் கிடையாது. காலையில் மலத்தை அள்ள ஆட்கள்
வருவார்கள். அனேகர் வீட்டில் விறகடுப்பு இருந்ததால் முதலில் வீட்டில் சாம்பல்
கேட்டு வாங்கிச் செல்வார்கள், மலம் அள்ள வந்தவர்கள். சாம்பலை மலத்திற்கு மேலே நிறைய தூவி, பின்னர் கையில் வைத்திருக்கும் ஒரு வகையான வளைவான கரண்டியை வைத்து உருட்டி
அதை ஒரு சட்டியில் போட்டு எடுத்துச் செல்வார்கள். என் பாட்டியுடன் சில தடவை
சென்றிருக்கிறேன். இன்றும் அடிக்கடி கனவில் வந்து பயமுறுத்தும், துர்நாற்றத்துடன்.
திடீரென்று எழில் அழுகைக் குரல் என்னை நிகழ்காலத்துக்கு
இழுத்து வந்தது. கீழே விழுந்து அழுது கொண்டிருந்தான். விளையாடுமிடத்தில் உள்ள தரையில் ரப்பர் தளம்
போட்டிருப்பதால் கீழே விழுந்தாலும் அடியெதுவும் படவில்லை.
அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தேன்.
அருகில்தான் வீடு. அடுக்குமாடி குடியிருப்பில் முதலாவது தளம். நம்ம
ஊருல தரைதளத்தை இங்கு முதலாவது தளம் என்பார்கள். இங்கு
அடுக்குமாடி குடியிருப்பும் மரத்தால் கட்டியது. அதனால்
எழில் வீட்டிற்குள் ஓடினால் கீழே இருக்கும் தளத்தில் சத்தம் அதிகமாக கேட்கும்
என்பதால் முதல் தளத்தையே வாடகைக்கு
எடுத்தோம்.
அமெரிக்காவில் நல்ல பள்ளி மாவட்டம் என்றால் வீடு வாடகை/வீடு
விலை அதிகம். இங்கு பள்ளிக் கட்டணம் முற்றிலும் இலவசம் 12ம் வகுப்பு வரை. எழில், கடந்த மூன்று மாதங்களாக அருகிலுள்ள மழலைப்பள்ளிக்குச் செல்கிறான்.
"சரி. டேய் குளிக்கப் போடா."
“ஏக்கு”
"எதுக்கா? உன் பிரெண்ட் பரத்வாஜ் பர்த்டே பார்ட்டிக்கு போகவேணாமா. போ போய் குளி"
"நோ, ஐ டோன்ட் வாண்ட் குளி!!" என கத்திக்கொண்டே படுக்கையறைக்குள் ஓடினான்
"டேய்!! ஒன்னு இங்கிலீஸ் ல பேசு, இல்லேன்னா தமிழ் ல பேசு. அது என்ன
பாதி இங்கிலீஸ் பாதி தமிழ்."
"விடுங்க , சின்னப்புள்ள
மழலைய ரசிங்க. குத்தம்கண்டுபிடிக்காதிங்க" என் மனைவி
சொல்லிக்கொண்டே டீயுடன் உள்ளே இருந்து வெளிப்பட்டார்.
"மழலைதான் ஆனாலும் தமிழ் ல பேசணும்ல." என்றேன் நான்.
"வள்ளுவர் என்ன சொல்லிருக்கார் தெரியுமா? " என என் மனைவி ஆரம்பித்தாள்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
மழலைச்சொல் கேளா தவர்
"குழந்தையின் மழலையில் ராசாவின் புல்லாங்குழல் போன்ற
இனிமை இல்லை, ரஹ்மான் இசையில் இருக்கும்
கவர்ச்சி இல்லை . சொற்கள், உச்சரிப்பு ஒலி, இவைகளை மீறியே உச்சரிக்கின்றன பிள்ளைகள். உளறிக் குழறும் அந்த சொற்களுக்கு எந்தப் பொருளும் கிடையாது. ஆனால் இவ்வளவு குறைபாடுகளும்
நிறைந்த அந்த மழலை மொழிகள் பெற்றோர்க்கு மட்டும் அமிழ்தமாக இருக்குது. இது ஏன்?
" என என் மனைவி கேட்ட கேள்விக்கு கொஞ்சம் யோசித்தேன்.
"தன் குழந்தைகள் மேல் பெற்றோருக்குள்ள அன்பும் பாசமும் தான் பெரும்பான்மையான காரணம் தவிர, வேறில்லை" என்றேன்.
"தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்
தான் குழலோசை யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்றுக்கூறுவார்கள். இதைச்சொன்னது
கலைஞர்." என்றார் என் மனைவி
"சரி, சரி, விட்டா புறநானூறு
பாட்ட எடுத்துவிட்டு பேச ஆரம்பித்துவிடுவாய்", என்று எழுந்தேன் சோபாவைவிட்டு .
"இன்னைக்கு எழில் பிரண்ட், பரத்வாஜ் பர்த்டே பார்ட்டி, கிபிட் ஏதாவது வாங்கி வச்சிருக்கியா?", என வினவினேன்
"பிறந்தநாளுக்கு வந்த பரிசுப்பொருட்களையெல்லாம்
எல்லாம் மற்றவர்கள் பிறந்தநாள்களுக்கு
கொடுத்தாச்சு. போகும்போது வால்மார்ட்டில் எதாவது டிரஸ் இல்லேன்னா கிப்ட் கார்டு
வாங்கிட்டு போகலாம்", என என் மனைவி சொல்ல
"சரி சரி சீக்கிரம் கிளம்பு", என்றேன்
வால்மார்ட், எங்கள் வீட்டிலிருந்து 10 நிமிட கார் பயணம். பயணத்திலும் மழலைப் பேச்சு பற்றியே பேச்சு தொடர்ந்தது.
"எழில், ஸ்கூல் போகாதவரை நல்லா தமிழ் பேசினான். மூன்று மாதமாக ஸ்கூலுக்கு போக
ஆரம்பித்ததிலிருந்து ஆங்கிலம் தான் வருது. தமிழை
மறந்திடுவானோ ன்னு பயமா இருக்கு", என்றேன் நான்.
"பயப்படத்தேவையில்லை, சான் பிரான்சிஸ்கோ வில் இருக்கும் உங்க நண்பரின் பிள்ளைகள் எப்படி நல்ல தமிழ் பேசுராங்க? அவர்கள்
வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டதே". என்கிறார் என் மனைவி ஆறுதலாக.
என் நண்பன் சந்தித்த பிரச்சனைகளை சொல்ல ஆரம்பித்தேன்.
"அவர்களுக்கும் இதே போல் பிரச்னை. ஊரிலிருந்து வந்த
கொஞ்ச நாள் தமிழ் பேசியிருக்கிறார்கள். ஸ்கூலுக்கு போக ஆரம்பித்தவுடன் தமிழ்
பேசுவதில்லை. நாம் தமிழில் பேசினால் புரியும் ஆனால் ஆங்கிலத்தில் தான் பதில்
கூறுவார்கள். கலிபோர்னியா தமிழ் அகாடமி நடத்தும் தமிழ் பள்ளிக்கு
வாராவாரம் தமிழ் கிளாஸ்க்கு போனாலும் அவன் பிள்ளைகள் ஆங்கிலத்தில் தான்
பேசுகிறார்கள்". கொஞ்சம் யோசித்து விட்டு தொடர்ந்தேன்.
"இதற்கு ஒரு தீர்வு அவனே கண்டுபிடித்திருக்கிறான். குழந்தைகள் ஆங்கிலத்தில் எதாவது கேட்டால் இவன் பதில்
சொல்வதில்லை . திருப்பியும்
கேட்டால், எனக்கு ஆங்கிலம் தெரியாது. என்று கூறி பதில் எதுவும் சொல்லாமல், தமிழில்
கேள், பதில் சொல்கிறேன் என கொஞ்சநாள் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறான். குழந்தைகளும் " என்னடா இது!! இந்த வீட்டில் தமிழ்ல பேசவில்லையென்றால் ஒன்னும் நடக்காதுன்னு
மெதுவா தமிழ் பேச ஆரம்பிச்சிட்டார்கள்"என்றேன்.
இதற்குள் வால்மார்ட் வந்துவிட்டது. காரை நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு நடந்தோம்.
"பிச்சைக்காரனுக்கு காசு கொடுக்காதீர்கள் என எத்தனை
தடவை உங்களுக்குச் சொன்னாலும் உங்க தலைக்குள் ஏறவே மாட்டேங்குது", என சிடுசிடுத்த என் மனைவியின் பேச்சை
உதாசீனப்படுத்தி விட்டு வால்மார்ட் உள்ளே சென்றோம்.
ஷாப்பிங் போனாலே நான்தான் குழந்தையை பாத்துக்கணும். என் மனைவி அவர்கள் விருப்பம் போல
வாங்கி குவிப்பார்கள். இதுதான் எங்களுக்குள் எழுதப்படாத
சட்டம்.
வால்மார்ட் உள்ளே என் மனைவி சரியான அளவாக சட்டை
தேடிக்கொண்டிருந்தாள். எழில், தொங்கும் துணிகளை இழுத்து இழுத்து கீழே போட்டுக்கொண்டிருந்தான். நானும் போனை நோண்டிக்கொண்டே , "டேய், துணிகளை இழுக்கதேடா" என இரண்டு மூன்று தடவை சொல்லியும் கேட்கவில்லை.
“டேய் மவனே இழுக்காதடா” என அதட்டி லேசாக கையில் கிள்ளினேன்.
'டோன்ட் கிள் மீ, அம்மா, அப்பா ட்ரயிங் டு கிள் மீ " என் கத்திக்கொண்டே ஓடினான், அம்மாவிடம் ஓடுவதாக நினைத்து எதிர்பக்கம் 'டோன்ட்
கிள் மீ', 'டோன்ட் கிள் மீ' என
கத்திக்கொண்டே ஓடினான், தொங்கிக்கொண்டிருக்கும்
துணிகளுக்கிடையில்.
எல்லோர் தலைகளும் என்னை நோக்கித்திரும்பின. தர்மசங்கடமான
சூழ்நிலை. என்னமோ நான் கொலைகாரன் மாதிரி என்னைப்பார்க்கிறார்கள்.
சுதாரிக்கும்முன், எழிலை காணோம். பகீரென்றது.
சத்தம் கேட்டு என் மனைவி என்னிடம் ஓடிவந்தாள். அவளது
பார்வையை சந்திக்க திராணியில்லாமல் "கவலைப்படாதே வேறு எங்கும் போயிருக்க மாட்டான், இங்குதான்
எங்கேயாவது இருப்பான்" என சொல்லிமுடிக்கும்முன் அழ
ஆரம்பித்துவிட்டாள்.
மூன்று நிமிடங்கள் கடந்தன. என் மனைவி ‘எழில்’ என
கத்துகிறாள், எங்கேயோ ஓடுகிறாள். ஏதோ சொல்கிறாள். ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாய் கழிந்து கொண்டிருந்தன.
911 கூப்பிடவேண்டியதுதான் என
முடிவெடுத்த போது, ஸ்பீக்கரில் ஒரு அறிவிப்பு.
'இங்கு ஆரஞ்சு கலர் டிரௌசர் போட்ட பையன்
இருக்கான், பெற்றோர்கள் வந்து அழைத்துச்செல்லவும்'. உயிர் போய் உயிர் வந்தது எனக்கு.
இரண்டுபேரும் ஓடினோம், அங்குள்ள அலுவலகத்திற்கு.
தூரத்திலே பார்த்துவிட்டேன், எழில் தான், அங்குள்ள
பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு கீழே தரையில் ஒருகால் முழங்கால் போட்டு ஒரு பெண் காவல் அதிகாரி அவனிடம்
பேசிக்கொண்டிருந்தார். மற்றொருவர் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்.
என் மனைவி எனக்குமுன் ஓடிச்சென்று அவனைத் தூக்கினாள்.
'ம் மா, ஐ யாம்
லாஸ்ட் மா', மா , ஐ
யாம் லாஸ்ட் மா' என புலம்பிகிட்டேயிருந்தான்.
காவல் அதிகாரி என்னிடம் வந்து, "நீங்கள்தான் அவன் அப்பாவா?"
என்றார்.
"ஆம்", என்றேன்.
"நீங்கள் அவனை கொலை செய்யப்போவதாக சொல்கிறானே".
நான் குபீரென்று சிரித்து விட்டேன்.
சத்தம்போட்டுச் சொன்னேன்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
மழலைச்சொல் கேளா தவர்
இரண்டு காவலர்களும் ' ங ' என விழித்தார்கள்.