Friday, September 19, 2008

பஹ்ரைன் காவல் நிலையம்

பஹ்ரைன் போலீஸை பார்த்ததும் தூக்க கலக்கத்திலிருந்த எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. நான் முழிப்பதைப் பார்த்து இந்தியில் கூறினார்கள். எனக்கு மேலும் குழப்பம். எப்படி பஹ்ரைன் போலீஸ் இந்தி பேசுவார்கள்? பின்பு தான் தெரிந்தது பஹ்ரைன் காவல் துறையில் பாதிபேர் பச்சைகள் ( பச்சை என்றால் பாகிஸ்தான் நாட்டவர்).

' குச் ப்ராப்ளம் நஹி, ஹம்கோ சாத் ஆஜாவ்' என்றார்கள். ( எதுவும் பிரச்சனை இல்லை, எங்களுடன் வா)
நானும் பாஸ்கரும் இரண்டு போலீஸ்காரர்களுடன் அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்றோம். வெளியே நண்பர் சசியும் மற்றொரு போலீஸும் இருந்தார்கள். வெளியே உட்கார்ந்திருந்த போலீஸ் நம்ம ஊர் ஏட்டையா மாதிரி இருந்தார் பெருத்த தொப்பையுடன்.

" ஹாத் மிலாவ், ஹாத் மிலாவ்" என்று எங்களைப் பார்த்து இந்தியில் கூறினார். கை கொடுத்துக் கொள்ளுங்கள் எல்லோரும் ஒரே நாட்டவர்கள். ஏன் அடித்துக் கொள்ள வேண்டும். சமாதானமாய் போய்விடுங்கள். கை கொடுத்துக் கொள்ளுங்கள் என்றார். ' நீங்கள் அரபிகாரனை அடித்திருந்தால் தான் பிரச்சனை ( அது என்ன கணக்கோ !!!!!!) உங்களுக்குள் என்றால் ஒன்றுமில்லை. என்றார். நானும் பாஸ்கரும் அமைதியாக இருந்தோம். சசி " முடியாது, வழக்கு பதிவு பண்ணியே தீருவேன்" என்றான்.

ஏட்டையா பஞ்சாயத்து பண்ண முயன்றார். பிராது கொடுத்தவன் (சசி) ஒத்து வரவில்லை என்றதால் எங்களை காவல் நிலையத்த்ற்குள்ளே அனுப்பினார்.
உள்ளே காவல் துறை ஆய்வாளர் , சூடான் நாட்டவர், கறுப்பர், மெலிவாக இருந்தார். வேறொருவருடன் பேசிக் கொண்டிருந்தவர் எங்களைப் பார்த்ததும் , அருகில் இருந்த அறையை காண்பித்து " அமர்ந்து பேசி முடித்துக் கொள்ளுங்கள்" என்றார்.

அது ஒரு கூடி விவாதிக்கும் அறை ( conference hall). சசியும் நாங்களும் எதிரெதிரே அமர்ந்தோம். நான் தான் முத்லில் பேச ஆரம்பித்தேன். விட்டுக் கொடுக்காமல் பேசினேன். " இதோ பார் சசி, வழக்கு பதிவு செய்தால், உன்னையும் சேர்த்துதான் ஊருக்கு அனுப்பி விடுவார்கள். எனக்கு ஒன்றுமில்லை, இது எனக்கு மூன்றாவது நாடு, ஏழாவது வேலை (company). நான் உடனே வேலை தேடிக் கொள்வேன். உன்னைப் பற்றி நினைத்துக் கொள். வழக்கு பதிவு பண்ணவா வேண்டாமா என்று நீயே முடிவு பண்ணிக் கொள்" என்றேன்.

பாஸ்கர் கொஞ்சம் இறங்கி வந்து பேசினான். (Good cop, Bad cop)
எதற்கும் சசி ஒத்து வரவில்லை. " வழக்கு பதிவு பண்ணியே தீருவேன் ' என்று பிடிவாதமாய் இருந்ததினால் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையும் முறிந்தது.

மூவரும் ஆய்வாளரிடம் சென்றோம். அவருடைய பஞ்சாயத்தும் எடுபடவில்லை. வேறு வழியின்றி வழக்கு பதிவு பண்ண ஆரம்பித்தார். அப்போதுதான் எங்களைப் பற்றி விசாரித்தார். எந்த நாடு என்றார். கூறினோம். எந்த ஊர் என்றார். கூறினோம். " நீங்கள் விடுதலை புலிகள் இல்லீயே" என்றார். சிரித்துக் கொண்டோம். கொஞ்சம் அறிவுரை கூறினார். மூன்று பேரும் படித்தவர்கள், பொறியாளர்கள், ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே இனம், ஒரே மொழி, பின்பு ஏன் அடித்துக் கொள்கிறீர்கள். என்றார்.

நம்ம யாரு, சேர, சோழ, பாண்டிய வம்சமாயிற்றே, அவருக்கென்ன தெரியும் தமிழர்கள் அவர்களுக்குள்ளே அடித்துக் கொள்வார்கள் என்று.

ஒரு வழியாக காலை 5 மணிக்கு ரிஃபா (Rifa) காவல் நிலையத்தில் எங்கள் மேல் வழக்கு பதிவு செய்து விட்டார்கள்.

காலை 9 மணிக்கு மனாமா (பஹ்ரைன் தலை நகர்) நீதிமன்றத்தில் ஆஜராகுங்கள் என்றார் காவல் துறை ஆய்வாளர்.

ஆட்டம் தொடரும்......

1 comments:

said...

Sivaksi aatam, Dindigul aatam ellam eluthu Srini! Very interesting , good flow in writing, can add more satire(nakkal) in writing!
With regards,
Bala