Sunday, September 2, 2007

சவுதியில் நாய் கறி - சவுதி ஆட்டம்-4

யான்பு பாலைவனத்தில் கோடையில் மிகவும் கடுமையான வெயில். சிவகாசிகாரனுக்கு வெயில் ஒன்றுமில்லைதான். ஆனால் வெயிலுடன் சில நேரம் பாலைவன புயல் அடிக்கும் போதுதான் மரண வேதனை. பகல் வேளையில் முன்னால் பத்தடி தூரம் தான் தெரியும். எங்கும் Brown கலர் மணல் மயம். உடம்பில் ஒரு இடம் கூட வெளியே தெரியாது. கண்ணுக்கு கண்ணாடி. தலை, காது, கழுத்துக்கு அரபியர்கள் அணியும் 'கேஃபியா' ( Keffiyah - head scarf ) வை சுற்றியிருந்தாலும் வாயில் மண் நறநறக்கும். மூக்கு, காதுக்குள் இருக்கும் மண்ணை வைத்து வீடு கட்டிவிடலாம். இந்த இயற்கை சீற்றத்தை சமாளிக்க ஏற்ற உடையைதான் அரபியர்கள் அணிகிறார்கள் என்பது என் எண்ணம். மேலிருந்து கீழே வரை பட்டன் இல்லாத ஒற்றை ஆடை. தலைக்கு ஒரு துணி. அதை தலையோடு பிடித்து வைக்க ஒரு வட்டு. தொழுகைக்கு செல்லுமுன் காது, மூக்கு கழுவுவது பாலைவன புயலால்தான் என்பது என் எண்ணம்.

நிறைய பிலிப்பினோ மக்கள் பழக்கமானார்கள். வார விடுமுறை நாளில் ஒரு நாள் என்னிடம் வந்து ' சீனி, கடலில் மீன் பிடிக்க போகிறோம் வருகிறாயா? ' என்றார்கள். எனக்கு கடலில் மீன் பிடிக்கத் தெரியாதே!! என்றேன்.சும்மா வா! கடலில் குளிக்கலாம், சாயங்காலம் camp fire இருக்கும், நல்ல வேடிக்கையாக இருக்கும் என்றார்கள். நானும் அவர்களுடன் கடலுக்குச் சென்றேன்.

எனக்கு தெரிந்த கடல், ராமேஸ்வரம் கடல் மட்டுமே। கல்லூரி நாட்களில் ஒரு தடவை "பாடு" க்கு சாவக்கட்டி என்ற அந்தோணியுடன் சென்றிருக்கிறேன். சாவக்கட்டி மீனவராக வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்பு கடத்தல் தொழிலில் ஈடுபட்டு 'உள்ளே வெளியே' என்றிருந்தார். பின்பு திருந்தி வாழ்ந்து ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார் சமீபத்தில். அவருடன் ஒரு இரவை கடலில் கழித்ததில் புதிய அனுபவம். எங்கு பார்த்தாலும் இருட்டு. தூரத்தில் சில வெளிச்ச புள்ளிகளை காண்பித்து ' அதுதான் இலங்கை' என்றார். வலையை கடலில் போட்டு மணிக்கணக்காக கடலை அரித்து எடுப்பார்கள். அது ஒரு பாடு. ஆக மொத்தம் ஒரு இரவுக்கு இரண்டு பாடுதான். பிடித்த மீனை சூடாக உள்ள எஞ்சின் exhaust குழாயில் வேக வைத்து உப்பு, மிளகாய் பொடி போட்டு சாப்பிட்டது நல்ல அனுபவம்.


பிலிப்பினோக்கள் எட்டு பேர், நானும் என் அறை நண்பர் ஜோசப் மற்றும் ஒரு கொழு கொழு நாய்.முதன் முதலில் வித்தியாசமான தூண்டில்களைப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த கடற்கரை அல்ல. நிழலில் ஒதுங்க இடம் கிடையாது. கண்ணுக்கெட்டியவரை யாரும் இல்லை. வெயில் 45 டிகிரி செல்சியஸ். மீன் பிடித்து எதுவும் சேர்காமல் சுட்டு ' சாப்பிடு, சாப்பிடு' என்றார்கள். ஏண்டா வந்தோம் என்றாகிவிட்டது. சாயங்காலம் ஆனது. ஆட்டம் ஆரம்பமானது.

முதலில் விறகு போட்டு தீ மூட்டினார்கள். ஒரு கூட்டம் தனியாக ஒதுங்கியது. இன்னொரு கூட்டத்தில் நான். Campல் தயாரித்த சாராயத்தைக் பெப்சியில் கலந்து கொண்டு வந்திருந்தார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன். பெப்சி குடித்துக் கொண்டே தீ மூட்டினார்கள். ஒரு மணி நேரம் கழித்து தனியாக போன கூட்டம் திரும்பியது. கையில் ஒரு கோணிப்பை. முதலில் எதுவும் புரியவில்லை. அவர்களுக்குள் தகாலுவில்(பிலிப்பினோ மொழி) பேசி சிரித்துக்கொண்டார்கள். கோணியை திறந்து தோல் உரித்த நாயை வெளியே எடுத்து போட்டார்கள்.

அதன்பிறகு நடந்தது என் வயிற்றைப் பிறட்டியது. நாயின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதி வெற்றிடத்தில் அரிசியை போட்டு அடைத்து நூல் போட்டு தைத்து விட்டார்கள். தலையில்லாத நாயை camp fireல் சுட ஆரம்பித்தார்கள். என் வயிற்றை சரி செய்ய நானும் கொஞ்சம் 'பெப்சி' குடித்துக் கொண்டேன். கொழுப்புடன் சேர்ந்து அரிசி வெந்து சோறாக மாறியதை எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். நாய் கறி ரெடி. நானும் கொஞ்சம் ருசி பார்த்தேன். தண்ணி உள்ளே போன பின்பு நாயாவது பேயாவது.. நன்றாக இருந்தது. சவுதியில் நாய் சாப்பிட்ட அனுபவம் பின்பு கொரியாவில் இருந்தபோது கை கொடுத்தது.சவுதியில் alcohol , நாய் சாப்பிடுவது "ஹராம்" (பாவம்). பிடித்தால் கடுமையான தண்டனை. செய்யக் கூடாததை செய்து பார்ப்பதுதான் thrill.. (மாட்டாதவரை).


சவுதி ஆட்டம் தொடரும்....

Thursday, August 2, 2007

சவுதி ஆட்டம் - 3

ஒட்டக மேய்ப்பர், தமிழில் பேசியது எனக்கு பயங்கர ஆச்சரியம். என்னை மலையாளியென நினைத்து விட்டார். ஒட்டக மேய்ப்பருக்கு 20 வயது இருக்கும். சவுதி வாழ்க்கையைப் பற்றி கேட்டேன். மடை திறந்த வெள்ளம் போல் பேசினார். புதுக்கோட்டை அருகில் ஒரு கிராமம்தான் அவருடைய பூர்வீகம். சவுதி வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. முதலில் வரும்போது "விவசாய வேலை" என்று சொல்லித்தான் agent அனுப்பியுள்ளார் ஒரு கும்பலுடன். ஆனால் கொடுத்ததோ ஒட்டகம் மேய்க்கும் வேலை. இவருடைய நண்பர்களுக்கு ஜெட்டா (Jeddah) துறைமுகத்தில் பளு தூக்கும் வேலை. அதற்கு ஒட்டகம் மேய்ப்பது பரவாயில்லையென அவருக்கு அவரே சமாதானப்படுத்திக் கொண்டார்.


அவருடைய அரபி முதலாளிக்கு சுமார் 100 ஒட்டகம். பாலைவனம் உள்ளே கூடாரம் போட்டு தங்கி ஒட்டகம் மேய்க்க வேண்டும். வாரம் ஒரு நாள் அரபி சாப்பாட்டுக்கு தேவையான அரிசி, உப்பு, புளி........ கடிதம், குடிதண்ணீர் கொண்டுவந்து கொடுத்து விடுவாராம். மாதம் ஒரு தடவை மருத்துவர் ஒட்டகங்களுக்கு ஊசி போட வருவார். சில தடவை குடும்பத்துடன் வந்து கூடாரம் போட்டு தங்கி செல்வதுண்டு. வாரம் ஒருமுறை ஒட்டகங்களை வேறு இடங்களுக்கு மேயவிட வேண்டும். அப்போது கூடாரத்தை கழற்றி ஒட்டகத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி போகும் போது அருகில் இருக்கும் கிராமங்களில் உள்ள உணவகத்தில் சாப்பிடுவது அவருக்கு பெரிய சந்தோஷம். ஒரு மலையாளியை சந்தித்து தமிழில் பேசினால் மிக பெரிய சந்தோஷம். அவருடைய அரபி முதலாளியைப் பற்றி உயர்வாக சொன்னார். அவருக்கு இருக்கும் தலையாய பிரச்சனை " பாலைவன புயலும் பம்பாய் விமான நிலைய அதிகாரிகளும்" தான்.

பாலைவன புயலைப் பற்றி கதை கதையாக சொன்னார். பம்பாய் விமான நிலைய அதிகாரிகள் இவரிடம் ரூ 2000 வசூலித்ததை (கொள்ளையடித்ததை) கூறி மிகவும் வருத்தப் பட்டார். நானும் பாலைவன புயலையும் பம்பாய் விமான நிலைய அதிகாரிகளையும் சந்தித்தேன்.


பின்பு அவரிடம் விடைபெற்று பயணத்தை தொடர்ந்தேன். மதினா அருகே வரும்போது சாலையில் வழிகாட்டி பலகையில் 'Muslims', ' Non-Muslims' என போட்டிருந்தது. முஸ்லிம் அல்லாதவர்கள் மதினா ஊருக்குள் நுழையமுடியாது. எங்கள் பேருந்து வெளிச் சாலையிலேயே மதினாவை கடந்தது.


சாயங்காலம் யான்புக்கு வெளியே உள்ள சிமெண்ட் கம்பெனிக்கு சென்றடைந்தோம். செங்கடல் கடற்கரை ஓரத்தில் பாலைவனத்தில் பழைய சிமெண்ட் ஆலைக்கு அருகில் புதிய சிமெண்ட் ஆலை கட்டிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே camp. ஜுபைல் (Jubail) வேலையை விட இங்கு பரவாயில்லை. ஒரே மாதத்தில் எல்லோருடனும் நன்றாக பழகிவிட்டேன். பழைய சிமெண்ட் ஆலையில் வேலை பார்க்கும் ஒரு அதிகாரியுடன் 2 வாரம் பழக்கம். பெரிய post ல் இருந்தார். அடிக்கடி என் கட்டுமான இடத்திற்கு (construction site) வருவார். தமிழ் காரர்தான் ஆனால் தமிழில் பேசவில்லை. சிமெண்ட் ஆலையில் பொறியாளர் வேலை வாங்கித் தருகிறேன் என அவராகவே கூறினார். ஒரு நாள் என் தோளில் கை போட்டு பேசினார். மறுநாளில் இருந்து என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.


நிறைய தமிழ் மக்கள் பழக்கமானார்கள். வாரம் ஒரு நாள் (வியாழக்கிழமை) சிற்றுந்தில் அருகில் இருக்கும் யான்புவுக்கு அழைத்துச் செல்வார்கள். அந்த நேரம் தான் shopping மற்றும் ஹோட்டல் சாப்பாடு. சாயந்திரம் இரண்டு தொழுகை இருப்பதால் நிறைய நேரம் சும்மா தான் உட்கார்ந்திருக்க வேண்டும்.

ஐந்து வேளை தொழுகை நேரத்தில் எல்லா கடைகளும் பூட்ட பட வேண்டும். சாப்பிடும்போது, முடிவெட்டும் போது தொழுகை நேரத்தில் மாட்டினால், பாதியிலேயே வெளியே அனுப்பிவிடுவார்கள். பெரிய கடைகளை அடிக்கடி மூடி திறக்க முடியாதென்பதால் திறந்தே போட்டுச் செல்வார்கள். மத தலைவர் கம்புடன் காரில் வலம் வருவார். முஸ்லிம்கள் கண்டிப்பாக தொழுகைக்குச் செல்ல வேண்டும் இல்லையென்றால் பின்புறத்தில் ரெண்டு அடி கிடைக்கும்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் தொழுகை நேரத்தில் அமைதியாக ஓரத்தில் அமர்ந்திருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதோ, புத்தகம் படிப்பதோ, தொலைபேசியில் பேசுவதோ கூடாது. ஒரு தடவை என் அறை நண்பர் ஜோசப் பொது தொலைபேசியில் பேசும் போது பிடித்து சென்று விட்டார்கள். நண்பர் ஆங்கிலத்தில் பேச, மத தலைவர் அரபியில் பேச இரண்டு பேருக்கும் ஒன்றும் புரியாமல், கடைசியில் தொழுகை முடியும் வரை இருக்க வைத்து எச்சரித்து அனுப்பி விட்டார். ( மத தலைவர் தொழுகைக்குச் செல்லவில்லை என்பது வேறு விஷயம்) அதிலிருந்து கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தோம்.

நேரம் சரியில்லையென்றால் எங்கு ஏறினாலும் நாய் கடிக்கும். மின்சார கம்பத்தில் மேலே ஏறி உட்கார்ந்திருந்தாலும் அங்கும் வந்து கடிக்கும். ஒரு நாள் நான், மற்றும் இரண்டு மலையாள நண்பர்கள் இதே போல் யான்புவுக்குச் சென்றோம். தொழுகை நேரம் ஒரு ஓரமாக ஒரு திண்டில் அமர்ந்தோம். அருகில் சில வீடுகள், சிறு பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அமர்ந்திருந்தபோது ஒரு அரபி எங்களிடம் வந்தான்.

" ஸலா, ஸலா' என்றான். ( "தொழுகை நேரம்" என்றான்). என்னுடன் வந்த மலையாள நண்பர் ரஞ்சித்

" மாஃபி ஸலா" (தொழுகை இல்லை/கிடையாது) என்று அரைகுறை அரபியில் கூறினார்.

கேட்டு போனவன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பையன்களிடம் ஏதோ அரபியில் கூறினான். சிறிது நேரத்தில் 4-5 பையன்கள் எங்களிடம் வந்தார்கள். ஒருவன் தண்ணீர் விளையாட்டுத் துப்பாக்கி வைத்து "புஸ் புஸ் " என்று என் முகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தான். மற்றொருவன் நண்பரை சிறு கயறு வைத்து அடித்தான். நாங்கள் எழுந்து நடக்க ஆரம்பித்தோம். அரபியில் கத்திக் கொண்டு என்னைப் பின் தொடர்ந்து வந்து தண்ணீர் அடித்தான். எனக்கோ பயங்கர கோபம். ஆனால் அரபி/அரபி பையன்களை அடித்தால் நாம்தான் கம்பி எண்ண வேண்டும். அடிக்கடி திரும்பி அடிப்பது போல் கை ஓங்கினதினால் கொஞ்சம் பயந்து பின் வாங்கினான். இருந்தாலும் என் சட்டை பாதி நனைந்துவிட்டது.



'நான் ஆட வேண்டிய மைதானம் இதுவல்ல' என்ற முதல் விதை மனதில் விழுந்தது.



சவுதி ஆட்டம் தொடரும்....

Sunday, July 8, 2007

சவுதி ஆட்டம் - 2

தமாம் விமான நிலையத்திலிருந்து அலுவலக பேருந்தில் பயணம். பிலிப்பினோ ஓட்டுநரிடம் எங்கு செல்கிறோம் என வினவினேன். Company camp க்கு செல்கிறோம் என்றான். Camp என்றவுடன் Mandapam Camp தான் நினைவுக்கு வந்தது.


அடிக்கடி மண்டபம் முகாமிற்கு சென்று வந்திருக்கிறேன்.சிறு வயதில் மண்டபம் முகாமிலிருக்கும் மீன்காட்சியகத்தில் கடற்பசு பார்த்தது, அருகில் உள்ள குருசடி தீவு க்கு சென்றது, நிழலாடியது.
ஒரு முறை சிறிய திமிங்கலம் மண்டபம் கடற்கரையில் உயிருடன் ஒதுங்கியது. உயிருள்ள திமிங்கலம் மேலே ஏறி விளையாண்டது இன்னும் பசுமையான நினைவுகள். இதில் சோகம் என்னவென்றால் திமிங்கலத்தை காப்பாற்ற அரசு/மக்கள் எதுவும் செய்யவில்லை. தற்சமயம் மண்டபம் முகாமில் நிறைய மாற்றம் இலங்கை அகதிகள் தவிர.


அலுவலக முகாமில் தங்கவைக்கப்பட்டேன். இரண்டு நாட்கள் கழித்து வேறு முகாமிற்கு மாற்றி விட்டார்கள். எதுவுமே பிடிக்கவில்லை. பேசுவதற்கு 1 ரியால் நாணயமாக தொலைபேசி பெட்டியில் போடவேண்டும். 10 ரியால் கொடுத்தால் 9 ரியால் கொடுப்பார்கள். தொலைபேசியில் என் அண்ணன் ' என்னடா! தமாமில் இன்று குண்டு வெடித்ததாமே? அங்கு எதுவும் பிரச்சனையா?'.என்றான். மறுநாள் பேப்பரை புரட்டினால் 'மூச்'. சவுதி மன்னர் பக்கத்து நாட்டு மன்னருடன் சிரித்துக் கொண்டிருந்தார். பத்திரிகை தணிக்கை.

'Jubail Petrochemya' வில் வேலை சுத்தமாக பிடிக்கவில்லை/தெரியவில்லை. வேலை இடத்தில் எங்கும் பிலிப்பினோ அதிகாரம்தான். மீட்டிங்கில் தகாலுதான் (பிலிப்பினோ மொழி) பேசுவார்கள், ஏனென்றால் மீட்டிங்கில் நான் மட்டும்தான் பிலிப்பினோ அல்லாதவன். எனக்கு கொடுத்த இந்திய தொழிலாளர்களோ சுத்தம். நானே ஒன்றும் தெரியாத கப்பி. எனக்கு வாய்த்தவர்களோ என்னை விட பெரிய கப்பிகள். 1 மாதம் வேடிக்கை பார்த்தேன் வேலையையும் மீட்டிங்கையும். என் ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன்.


மனிதவள மேளாளர் எனக்கு புத்திமதி கூறி 'பிலிப்பினோ கூட்டத்தை குறைப்பதற்குத்தான் நான் இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறேன். கொஞ்ச நாள் வேறு projectல் வேலை செய், பிறகு முடிவு செய்' என்றார். எனக்கும் நல்லதாக பட்டது. இரண்டொரு நாளில் ' Yanbu' செல்ல ஏற்பாடாயிற்று. தமாமிலுருந்து யான்பு செல்ல 24 மணி நேர (ரியாத், மதினா வழியாக) பேரூந்து பயணம். மிக இனிமையான பயணம்.


பேரூந்தில் மூன்றே பேர்தான், நான், பிலிப்பினொ ஓட்டுநர், ஒரு மலையாள நண்பர்.சாலை இருபுறமும் sand dunes பார்க்க கண் கொள்ளா காட்சி. சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் மணல் தண்ணீர் மாதிரி ஓடுவது அழகு. சில இடங்களில் மணல் சாலைக்கு வந்தால் ஒதுக்குவதற்கு புல்டோசர். சாயந்திரம் ரியாத்திற்கு வெளியே ஒரு சாலையோர உணவு விடுதியில் இரவு உணவு. வித்தியாசமான மோட்டல். கீழே உட்கார்ந்து சாப்பிடவேண்டும். சாப்பிட்டவுடன் ஹுக்கா & தலையணை இலவசம். அதன்பின் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து செல்லலாம். எங்கள் அருகே ஐந்து பேர் ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தட்டில் அரை ஆடு சமைத்து வைத்திருந்தது. நான் சாப்பிட்ட வான் கோழி பிரியாணி. துருக்கி நாட்டு style. மசாலா/எண்ணெய் மிக குறைவு. திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணியில் மசாலா கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ஹதராபாத் paradise பிரியாணி காரம்/மணம் அதிகம். பங்களாதேஷ் பக்ருதின் பிரியாணியில் மசாலா இருக்காது. ஆனால் சுவை அதிகம். ஒவ்வொரு பிரியாணியும் தனி ரகம் & தனி சுவை.


இரவு முழுவதும் பேரூந்து பயணம், அதிகாலை ஆள் அரவமில்லாத ஒரு சிறிய சாலையில் நின்றது. 2 மணி நேரம் ஓய்வு என்று ஓட்டுநர் கூறி அருகில் இருந்த சிறிய மணல் மேட்டில் படுத்து உறங்கிவிட்டான். பேரூந்துக்கு வெளியே வந்தேன். ஒரு பக்கம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒன்றுமில்லை வெறும் கட்டாந்தரைதான். மறுபக்கம் தூரத்தில் மலைகள். மலையில் ஒரு செடி கூட கிடையாது. மலை என்று கூறுவதைவிட கற் குவியல் என்றுதான் சொல்லவேண்டும். சிறிய கற்களை அழகாக அடுக்கி வைத்த மாதிரி. அடியில் உள்ள ஒரு கல்லை உருவினால் போதும் மொத்த மலையும் சரிந்து விழுமோ என்ற ஐயம்.



சிறிது நேரத்தில் ஒட்டகக் கூட்டம் தென்பட்டது. சிறியதும் பெரியதுமாக வித விதமாக ஒட்டகங்கள். சின்ன முட்களை சாப்பிட்டது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது ஒட்டக மேய்ப்பாளர் எங்களை நோக்கி வந்தார்.

கையில் பெரிய கம்பு. கருப்பு போர்வை போன்று உடை. முகத்தை மறைத்திருந்தார். அருகில் வந்தவர் முகத்திலிருந்த துணியை விலக்கி என்னிடம் தமிழில் பேச ஆரம்பித்தார்.



சவுதி ஆட்டம் தொடரும்.....

Friday, June 29, 2007

சவுதி ஆட்டம் - 1

முதன் முதலில் வெளிநாடு சென்று வேலை பார்க்க போகிறேன். உற்றார், உறவினர், நண்பர்கள் என்று வஞ்சனையில்லாமல் எல்லோருக்கும் என் பயணத்தைப் பற்றி தெரிவித்திருத்தேன். நட்புக்காக உயிரையும் கொடுக்க கூடிய பாஸ்கர், அப்போதுதான் 4 வருட பொறியியல் படிப்பை 8 வருடங்களில் முடித்திருந்தான். வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் மதுரைப்பக்கம் மட்டும் வேலை தேடிக்கொண்டிருந்தான் பெற்றோரின் அறிவுரைப் படி. சீனியை சென்னையிலிருந்து வழியனுப்பிவிட்டு வருகிறேன் என்று வீட்டில் கூறி மும்பை வந்திருந்தான்.

குறிக்கப்பட்ட நாளில் உற்றார், உறவினர், நண்பர்கள் புடைசூள விமான நிலையம் வரை சென்று விமான சீட்டு / கடவு சீட்டு பிரச்சனையால் 2 நாட்கள் கழித்து பயணமானேன். சவுதியா விமானத்தில் முதலில் அரபியில் இறைவனை வேண்டினார்கள். புரண்டு, உருண்டு வளர்ந்ததெல்லாம் முஸ்லிம் தெருவிலும் பள்ளிவாசல் என்பதால் ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை.அடுத்த மதத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்தால் ' religious tolerance' கொஞ்சம் இருக்கும் என்பது என் நம்பிக்கை. அதை சிறு வயதிலிருந்தே கொண்டு வந்தால்தான் முடியும். சிங்கப்பூரில் பள்ளியிலிருந்து குழந்தைகளை மற்ற மத வழிபாடு இடங்களுக்கு அழைத்து செல்வார்கள். கோயில், பள்ளிவாசல், குருத்வாரா உள்ளே என்ன நடக்கிறது, எப்படி வழிபடுகிறார்கள், மற்ற மத நம்பிக்கைகள் பற்றி சிறு வயதில் அறிந்தாலே நாட்டில் கொஞ்சம் மத வெறி குறையலாம்.

விமானத்தின் பின்புறம் நாலைந்து அரபியர்கள் புகைத்து கொண்டிருந்தார்கள். பணிஆண்கள் சாப்பாடு பரிமாறினார்கள். குடிக்க தண்ணீர் மட்டும்தான். alcohol க்கு தடா. தமாம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. எல்லா பெட்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது ' பெட்டிகள் சோதனை' என்றார்கள். மிக நீள மேசையில் ஒவ்வொரு பெட்டியையும் பிரித்து மெய்ந்து கொண்டிருந்தார்கள் இரண்டு அரபியர்கள்.
முதன் முதலில் சவுதி என்பதால் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்காமல் (கேட்க முடியுமா?) நானும் பெட்டியை திறந்து வைத்தேன். எனக்கு முன் உள்ளவனுடைய ( பார்த்தால் நம்ம ஊர் மாதிரி இருந்தான்) பெட்டியை சோதித்து உள்ளே இருந்து போஸ்ட் கார்டு அளவில் உள்ள பிள்ளையார்பட்டி பிள்ளையார் புகைபடத்தை எடுத்தான் அரபி. நம்மாளை ஒரு முறை முறைத்து விட்டு நான்காக கிழித்து குப்பையில் எறிந்தான் பிள்ளையாரை. நம்மாளோ ' ங ' என்று விழித்தான். நான் அதிர்ந்தே விட்டேன். அடுத்து என் பெட்டியை பார்த்தான். துணிகள் அழகாக மடிக்கப் பட்டதை பார்த்து எதையும் கலைக்காமல் அடியில் உள்ளே கை விட்டான். பெட்டியை இரண்டு முறை சுண்டி தட்டி பார்த்தான். என்ன நினைத்தானோ என்னை போக சொல்லிவிட்டான். நான் கொண்டு சென்றது தப்பித்தது. பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அடுத்து வந்த மலையாளத்தானை சோதனையிட்டான். அவன் என்னை போல புதிது போல. உள்ளேயிருந்து ஒரு நூலை எடுத்து அவனிடம் காண்பித்து ' இது என்ன?' என்று வினவினான். அவன் ' பைபிள்' என்றான். அதை கிழிக்கா முடியாததால் குப்பையில் எறிந்தான் அரபி.

கைப்பற்றியதை எல்லாம் என்ன செய்வார்கள்? படித்து பார்ப்பார்களா? எரித்து விடுவார்களா? பக்கோடா பொட்டலம் போட பயன்படுத்துவார்களா? யோசித்துக் கொண்டே வெளியே வந்தேன். பின்புதான் தெரிந்தது, சோதனையிடுவது மாற்று மத நூல்களையும், விக்ரகங்களையும், படங்களையும் தடுப்பதற்கு மட்டுமல்ல, நீல படங்கள், மஞ்சள் பத்திரிக்கை, ஒலி நாடா ( என்ன கலர்? ) மற்றும் போதை மருந்துகளை தடுப்பதற்க்காகவுமே. இதில் வேடிக்கை என்னவென்றால் மேற் கூறிய எல்லாம் சவுதிக்குள் தாராளமாக புழங்குவது எல்லோரும் அறிந்த உண்மை.



சவுதி ஆட்டம் தொடரும் .....

Wednesday, June 6, 2007

ஆஹா!! கடா வெட்டுறாய்ங்கடோய்...

http://www.youtube.com/watch?v=9GpPcMVbmtw


இதை ஏற்பாடு செய்த "HR Manager" இறந்து ( ஒரு பேச்சுக்குத்தான்) மேலுலகம் சென்றாராம்.
"தங்கள் வரவு நல்வரவாகுக" என்று வரவேற்ற சித்திரகுப்தன், " பாருங்கள் இதுவரை இங்கே மனித வள மேளாளர் எவரும் வந்ததில்லை. அதனால் உங்களை எங்கே அனுப்புவது என்று தெரியவில்லை" என்றார்.
மனித வள மேளாளரோ " என்னை சொர்க்கத்ற்குள் விடுங்கள். நான் அங்கேயே காலத்தை கழிக்க விரும்புகிறேன்" என்றார்.
" இல்லை !! எருமை பார்ட்டியிடமிருந்து உத்தரவு வந்திருக்கிறது. நீங்கள் ஒரு நாள் சொர்க்கத்திலும், ஒரு நாள் நரகத்திலும் இருக்கவேண்டும். அதன் பின், மீதி நாட்களை எங்கே கழிக்கவேண்டுமென்று உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் " என்றார்.
ஆனால் மனித வள மேளாளரோ " எனக்கு நரகம் போக விருப்பமில்லை, நான் சொர்க்கத்திலேயே இருக்கிறேன்" என்றார்.
" மன்னிக்கவும்!! சட்டம் என்றால் சட்டம்தான். உங்க ஊர் ஹெல்மட் சட்டம் அல்ல. நீங்கள் ஒரு நாள் சொர்க்கத்திலும், ஒரு நாள் நரகத்திலும் இருக்கவே இருக்கவேண்டும் " என்று கூறி மனித வள மேளாளரை மின் தூக்கி உள்ளே அனுப்பினார்.
மின் தூக்கி கீழே கீழே கிழே நரகத்திற்குச் சென்றது.
மின் தூக்கி கதவு திறக்கப்பட்டது. அங்கே அவர் கண்டது கண்கொள்ளா காட்சி. எங்கு பார்த்தாலும் பசுமை, அழகான பூங்கா, தூரத்தில் அவர் அடிக்கடி செல்லும் மனமகிழ் மன்றம். வெளியே அவருடன் வேலை பார்க்கும் நண்பர்கள் கையில் மாலையுடன் வரவேற்கிறார்கள். படத்தில் உள்ளது போல் எல்லோரும் கை கொடுத்து கை தட்டி உற்சாகபடுத்துகிறார்கள். யானையும் வந்து அவருக்கு மாலை போட்டது. அதன் பிறகு ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். நண்பர்களுடன் பழைய கதைகள் பேசி பேசி பொழுது போனதே தெரியவில்லை.
மனித வள மேளாளருக்கு பிடித்த "வயதான பிச்சு (old monk)" ரம் & வறுத்த கோழியுடன் இரவில் மிக அருமையான விருந்து. விருந்தில் சாத்தானை சந்தித்தார். சாத்தான் மிக அழகாக இருந்தார் அடிக்கடி "A' ரக ஜோக் சொல்லி குஷிபடுத்தினார். சாத்தானுடன் நடனமாடினார்.
" ஆகா! இவ்வளவு இன்பமானதா நரகம் " என்று நினைக்கும்போதே அவர் விடைபெறும் வேளை வந்தது. அவர் நண்பர்களும் சாத்தானும் கை குலுக்கி மின் தூக்கி வரை வந்து வழி அனுப்பினார்கள்.
மின் தூக்கி மேலே மேலே சென்றது. சித்திரகுப்தன் கதவை திறந்து " அடுத்த ஒரு நாள் சொர்க்கத்தில்" என்று கூறி அவரை சொர்க்கத்திற்கு அனுப்பினார்.
ஒரு நாள் முழுவதும் தேவதைகளுடன் மேக கூட்டதிற்குள் உய்யலாலா பாடி திரிந்தார். ரம்பை, ஊர்வசி, மேனகா நடனங்களை கண்டு ரசித்தார். ஒரு நாள் முடிந்தது. சித்ரகுப்தன் மீண்டும் வந்தார்.
"சரி. நீங்கள் ஒரு நாள் சொர்க்கத்திலும், ஒரு நாள் நரகத்திலும் இருந்தீர்கள். இப்பொழுது மீதி நாட்களை எங்கே கழிக்கவேண்டுமென்று உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் " என்றார்.
மனித வள மேளாளர் சிறிது நேரம் யோசித்து " நல்லது. நான் இதை சொல்வேன் என்று நானே எதிர் பார்க்கவில்லை. சொர்க்கம் நன்றாகத்தான் இருந்தது ஆனால் அதைவிட நரகத்தில்தான் நன்றாக பொழுது போனது"
உடனே சித்ரகுப்தன் அவரை மின் தூக்கிக்கு அழைத்துச் சென்று நரகத்திற்கு வழிஅனுப்பிவைத்தார்.
மின் தூக்கி கீழே கீழே கிழே நரகத்திற்குச் சென்றது.
மின் தூக்கி கதவு திறக்கப்பட்டது. நரகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் மேளாளர் . கண்ணுக்கு எட்டியவரை எங்கு பார்த்தாலும் பாலை நிலம். ஒரு மரம் கூட தென்படவில்லை. எங்கு பார்த்தாலும் மனித மலம். ஒரே துற்நாற்றம்.
மேளாளரின் நண்பர்கள் கிழிந்த உடையுடன் குப்பை அள்ளிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் இரண்டு தடியர்கள் எண்ணெய் சட்டிக்கு தீ மூட்டிக் கொண்டிருந்தார்கள்.
மேளாளர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அப்பொழுது சாத்தான் அவர் அருகில் வந்து தோளில் கை போட்டு புன்னகை செய்தார்.
மேளாளர் நடுக்கமுடன் " எனக்கு ஒன்றும் புரியவில்லை, நேற்று நான் இங்கு இருந்தேன். நண்பர்களுடன் ஆடினேன் பாடினேன், ஆனால் இப்போ .... " வார்த்தை வராமல் தடுமாறினார்.

சாத்தான் மேளாளரைப் பார்த்து புன்னகைத்து

"Yesterday we were recruiting you, today you're an Employee"

Sunday, June 3, 2007

என் முதல் பதிவு

மும்பையில் வேலை பார்த்து கொண்டிருந்த சமயம்। வேலை அலுவலாக 15 நாட்கள் துபாய் சென்று வந்ததிலிருந்து, நாமும் வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற தாக்கம் அதிகமாயிற்று. என் நண்பன் கஞ்சா சரவணன் வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.
"டேய் மாப்ளே என்னையும் ஆட்டையில் சேர்த்துகோடா " என்று அடைகலமானேன்.

கஞ்சா சரவணன் - பெயர் காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல. திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளபட்டி சொந்த ஊர். (பொறியியல்) கல்லூரி நாட்களில் நன்கு படிப்பவன். பரிட்சை திருவிழாவை முதல் வாரத்திலேயே முடித்துவிட்டு மீதமுள்ள நாட்களில் எங்களுக்காக பிட் அனுப்புவது, எந்த கேள்விகளை பிட் எழுதி கொண்டு செல்ல வேண்டும் என்றுஅறிவுரை கூறுவது அவனது பொழுதுபோக்கு + கடமை.
பரிட்சை திருவிழா - நிறைய அரியர்ஸ் வைத்து கொண்டு ஒரு மாதத்திற்கும் மேலாக காலை, மாலை என்று இரவு பகல் பாராமல் பரிட்சை எழுதுவதால்.

"டேய் சீனி ! வெளிநாட்டில் பைபிங் வேலை தான் அதிக சம்பளம். அதனால் நாம் பைபிங் இஞ்ஜினியராக போகிறோம்" என்றான்.
"உனக்கு ஏற்கனவே தெரிந்த தொழில். ஆனால் எனக்கு? பைப் என்றால் வீட்டிலிருக்கும் குழாய் தான் தெரியும்." என்றேன்
"நான் உனக்கு சொல்லி தருகிறேன்" என்று கூறி பாடத்தை ஆரம்பித்தான். நானும் கேட்டுக்கொண்டேன் வாரமொருமுறை. கஞ்சா சரவணனுக்கு மும்பையில் நிறைய இடைததரகர்கள் தெரியும். ஓரு நாள் அவனிடமிருந்து போன், பாந்த்ரா குர்லா காம்ப்ள்க்ஸில் இருக்கும் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் அலுவலகதிற்கு வந்துவிடு, உனக்கு நாளை பைபிங் இஞ்ஜினியருக்கு நேர்காண்ல். வெற்றியென்றால் நேர்காணல் எடுத்த அதிகாரிக்கு 1 மாத சம்பளம் கையூட்டு கொடுக்கவேண்டும்" என்றான்.
மறுநாள் நானும் இயன்றவரை பைப் பற்றி படித்து சென்றேன். இருந்தாலும் எதுவும் தெரியாத ஏரியாவில் நேர்காணல் என்றால் உதறல்
எடுக்கத்தானே செய்யும். ஆனால் நடந்ததோ வேறு.
" சீனி, பைபிங் இஞ்ஜினியருக்கு வேறு ஆளை போட்டு விட்டார்களாம், பைபிங் போர்மேன் களுக்கு ஆட்களை எடுக்கிறார்களாம்"
" டேய் கஞ்சா, பைபிங் போர்மேனா போனா என்னடா?"
" வேண்டாம்டா, வேறு வேலை பார்க்கலாம், கொஞ்சம் பொறு"
" இல்லடா, நேர்காணல் ஏற்பாடு செய்" என்றேன்.
கொஞ்ச நேரத்தில் ஏற்பாடு செய்து அலுவலகத்திற்குள் அனுப்பினான் என்னை. முதல் மற்றும் அடித்தளத்தில் இயங்கும் அலுவலகம் . நிறைய தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைக்கு முற்றுகையிடும் இடம். இதில் தமிழ், மலையாளம், பிஹார் மக்கள் தான் அதிகம்.
மலையாளிகள் அநேகமாக Skilled workers.
தமிழர்கள் - casual labours
பிஹாரி - Brick works / carpenters
Welder, Fitters போன்றவர்களுக்கு அடித்தளத்தில் நேர்காணல். வராந்தா வில் வரிசையாக மேசை போட்டு அதிகாரிகள் அமர்ந்திருந்தார்கள்.
இடைததரகர்கள் ஆட்களை நேர்காணலுக்கு அழைத்து வந்து விடுவார்கள். அந்த இடம் சந்தையை போன்று ஒரே சத்தம்.
நானும் நேர்காணல் அதிகாரி முன் சென்று அமர்ந்தேன். இது நாள் வரை என் வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட நேர்காணல் மற்றும் தொலைகாணல் கண்டிருக்கிறேன். சில நேர்காணல் மறக்க முடியாத அனுபவம். அதில் ஒன்றுதான் இது.
இந்தியில் தான் ஆரம்பித்தார். எனக்கோ இந்தி சரியாக வராது. தமிழகத்தில் அதிகம் பேர் இந்தியில் பேசுபவர்கள் உள்ள ஊரை சேர்ந்தவனென்றாலும் இந்தி கற்றுக்கொள்ள வில்லை. முதன் முதலில் மும்பை வந்தபோது இந்தி கற்றுக்கொள்ளாததின் வலியை உணர்ந்தவன். தாய் மொழி மேல் காதல் கொண்டிருந்தாலும், பிழைப்பிற்காக மற்ற மொழிகளை தெரிந்து வைத்து கொள்வது நலம் என்று கருதுபவன்.அதனால்தான் கொஞ்சம் தெலுங்கு, கொஞ்சம் கன்னடம், கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் இந்தி கற்றுகொண்டேன். ஏன், சீன மொழி கூட மொழிபள்ளிக்கு சென்று கற்றுகொண்டேன். நான் கற்றுக்கொள்ளவில்லை என்று வருத்தப்பட்ட ஒரே மொழி " மலாய்". மிகவும் எளிய மொழி. கற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தும் கற்றுக் கொள்ளவில்லை. ஏன் என்று எனக்கே தெரியவில்லை.

நேர்காணலை ஆரம்பிக்கலாமா என்று வினவினார். சரி என்றேன்.
" ஆங்க் லக்னெக்கேலியே கியா கியா சாஹியே" ( தீ பிடிக்க என்ன என்ன வேண்டும் )
" ஆங்க் சாஹியே" ( தீ வேண்டும் ) என்றேன்.
"பச் ! தீ பிடிக்க என்ன என்ன வேண்டும்"
"தீ வேண்டும்" என்றேன் மறுபடியும்.
" டீக்கே டீக்கே, ஓ ஆங்க் லக்னெக்கேலியே கியா கியா சாஹியே" (சரி சரி , அந்த தீ பிடிக்க என்ன என்ன வேண்டும் )
" தீ குச்சி வேண்டும்" என்றேன்
" வேற"
"side சாஹியே" என்றேன்
" வேற"
........
" அரே ! ஹவா சாஹியே" ( காற்று வேணும் ) என்று கூறி கெகே பிகே என்று சிரித்தார். பின்பு மேசை ட்ராயரிலிருந்து ஒரு ட்ராயிங் எடுத்து விரித்து " இந்த ட்ராயிங் பெயர் என்ன" என்றார். நானே ஒரு அண்ட்ராயர் (undrawer). scale வைத்து கோடு போட்டாலே நேர் கோடு வராது. கல்லூரி நாட்களில் machine drawing தேர்வில் ஒன்றும் தெரியாமல் அசிங்கமான படம் வரைந்து வைத்து விட்டு வந்ததால் விசாரணைக்கு ஆளானவன்.
" நஹி மாலும்" என்றேன்.
அடுத்து புகைபட அல்பம் ஒன்றை எடுத்தார்। அதில் ஒரு படத்தை காண்பித்து இது என்ன? என்றார். ( அது ஒரு சுமை தூக்கி). தெரியாது என்றேன். அடுத்து ஒரு படத்தை காண்பித்து "இதில் குழாய் ஏன் வளைந்துள்ளது" என்றார்.(Expansion Loop in steam piping)
"குழாய் போட இடமில்லை, அதனால் வளைத்து போட்டிருக்கிறார்கள்" என்றேன்.
கடுப்பாகி "ஒரு பதிலாவது சரியாக சொல்வாய் என எதிபார்த்தேன். சரி பரவாயில்லை. நீ தேர்வாகிவிட்டாய். உன் நண்பனை என்னை வந்து பார்க்க சொல் " என்றார்.
நானும் வெளியே வந்து சரவணனை உள்ளே அனுப்பினேன். திரும்பி வந்தவன் " சீனி, பத்தாயிரம் கேட்கிறாண்டா, சம்பளத்தை அதிகரித்தால் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்" என்றான்.
இரண்டு நாட்களில் உடன்பாடு எட்டப்பட்டது. மாதம் 350 அமெரிக்க டாலர் சம்பளம். சவுதி அரேபியாவில் உள்ள "அல் மொஜில்" என்ற மிக
பெரிய கம்பெனியில் வேலை.
ஒரே மாதத்தில் விசா தயாராகிவிட்டது. மூன்றரை ஆண்டுகள் மும்பையில் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ராஜினாமா செய்தேன்.
சவுதி அரேபியா கனவில் மிதக்க ஆரம்பித்தேன். கஞ்சா சரவணன் கடைசி வரை " " வேண்டாம் கொஞ்சம் பொறுடா வேறு வேலை பார்க்கலாம் " என்றான்.
போய் பார்த்துதான் பார்க்கலாமே என்னவென்று. பிடிக்கவில்லையென்றால் திரும்பி வரபோகிறேன்.