Tuesday, December 18, 2018

பசியாறிட்டீங்களா?



மனமுருக முருகனை தரிசித்து/வேண்டி  விட்டு பத்து மலைக் குகையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தேன். ஐந்து மணிக்கு Sam ஐ சந்திக்கும் அவசரத்தில் வேகமாக படியில் இறங்கியபோதுகைபேசி சிணுங்கியது. சாம் தான் பேசினான்.

"வந்துட்டீங்களா" என்றதற்கு “நான் ஒரு மணி நேரம் முன்னேமே 'Uber' ல் வந்துட்டேன்”, என்றேன்.

நான் அருகில் இருக்கும் காகா கடையில் (தமிழ் முஸ்லீம் சாப்பாட்டுக்கடை) இருக்கிறேன். காடியில் (கார்) எண்ணெய் ஊத்திட்டேன்.  போற வழியில் எண்ணெய் போட நேரம் இருக்காதுடிராபிக் அதிகமா இருக்கும்.  இது பீக் டைம்  லா” என்ற சாமிற்கு 

படி இறங்கிக்கொண்டிருக்கிறேன் இன்னும் பத்து நிமிடத்தில் அங்கு இருப்பேன்" என்றேன் நான்.

கட்டட பொறியியல் படித்துவிட்டுதாது வெட்டி எடுக்கும் கம்பெனியில் சென்னையில் பணி செய்கிறேன். அடிக்கடி கோலாலம்பூர்  பயணம். வரும்போதெல்லாம் பத்து மலை முருகனை தரிசிக்காவிட்டால் ஏதோ ஒன்றை இழந்ததுபோல இருக்கும். சாம் என்ற சம்பந்தன் கோலாலம்பூர் அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்ப்பவன். மலேசியன். தமிழ் வம்சாவழி ஆனால் இந்தியாவிற்கு வந்ததில்லை. சம்பந்தன் என்றே நான் அழைப்பதுண்டு.

ஈப்போவில் (Ipoh) நம் சொந்தக்கார தாத்தா இருக்கிறார். ஒரு எட்டு போய் பார்த்திட்டு வாடா" என அம்மாவின் நச்சரிப்பு. 

அம்மா அவரை  தாத்தா என்பார்கள். எங்களுக்கு சொந்தமா இல்லையா எனத்  தெரியாது. நான் சிறு வயதில் இருக்கும்போது தாத்தா என் வீட்டிற்கு வந்திருக்கிறார். அதன் பின்பு கடித போக்குவரத்துதான். இந்த முறை கண்டிப்பாக போகவேண்டும் என அம்மாவின் கட்டளை. கைபேசி மூலம் சாயந்திரம் 7 மணிக்கு வந்து விடுவேன் என தாத்தாவிடம் தெரிவித்துவிட்டேன். 

இரவு சாப்பாடு நம் வீட்டில் தான் என தாத்தா சொன்னதால் சரியான நேரத்திற்கு போகவேண்டும் என எண்ணிக்கொண்டேன்என்னிடம் கார் இல்லாததால் சம்பந்தனிடம் கேட்டேன்.

"என்னோட காடிய எடுத்துட்டு போங்கலா. கையில் ஒரு 150 வெள்ளி சில்லறையாக வைத்துக்கொள்ளுங்க. போலீஸ் பிடித்தால் கொடுப்பதற்கு" என்றவனிடம் வற்புறுத்தி வரச்சொன்னதால் என்னை அழைத்துப் போக காத்திருக்கிறான்.

1925ம் வருடம், மலேயா நாட்டில் (இன்றைய மலேசியா) கோலாலம்பூரிலிருந்து 200 கிலோமீட்டர் வடக்கே (ஈப்போ நகரத்திற்கு அருகில்ராயா ஆற்றுக்கரையோரம் தமிழ்வாணன் குட்டி போட்ட பூனை மாதிரி அங்கும் இங்கும் ஓடி எல்லா வேலையாட்களை விரட்டிக்கொண்டிருந்தார்.

"ஏய் ராசய்யா.. இன்னுமாடா அந்த மாலையக் கட்டுறவேகமா கட்டுடா"

"டேய் சுப்பு,  வாழமரம் வெட்டி எடுத்துட்டு வரும்போதுஐயாவுக்குப் பிடித்த செவ்வாழை ஒரு தார் அறுத்து எடுத்துட்டு வாடா  "

"டேய் சாமி… எங்க போய்ட்டு இருக்கேஐயா வர்றதுக்குள்ளே கறிச்சோறு தயாரா இருக்கணும்புரிஞ்சுதா "

"ஏய் வீராஐயாவுக்கு பிடிச்ச சாமியாட்டம் அடிக்கனும். பறைய அடிக்கிற அடி பத்து குகையைத் தாண்டி கோலாலம்பூர்க்குக் கேக்கணும்.

காலையிலிருந்து தமிழ்வாணன் சுழன்றுகொண்டிருக்கிறார். இன்று காலை ஐயாடிம்மூரிலிருந்து (Timor, இந்தோனேசியாபினாங்கு  துறைமுகத்திற்கு வந்திறங்கியிருப்பார்.
தமிழ்வாணன் குறிப்பிடும் ஐயாவில்லியம் கெல்லி ஸ்மித் (William Kellie Smith) ஸ்காட்லாந்தில் பிறந்து இருபதாவது வயதில் மலேயாவுக்கு கட்டிட பொறியாளராக வேலைக்கு வந்தார். மலேயா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. வந்த இடத்தில் தொழில் தொடங்கி பேராக் மாநிலத்தில் காடுகளை அழிக்க அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்றார்.

காடுகளை அழிக்க இந்தியாவிலிருந்து தமிழ் மக்களை அழைத்து வந்தார். இலாபம் கொட்டியது. 3000 ஏக்கர் காடுகளை வாங்கி தமிழர்களை வேலைக்கு அமர்த்தி காப்பித்தோட்டம் போட்டார். மேலும் பணம் கொட்டியது. சில வருடங்களில்சந்தையில் காபி விலை சரிந்ததால் வியாபாரம் நொடிந்தது. வேறு என்ன தொழில் செய்யலாம் என யோசித்த போது  தான் தமிழர் ஒருவர் சொன்ன "பச்சைலை" (Patcholi - தமிழிலிருந்து ஆங்கிலம் எடுத்துக்கொண்ட சொல்எண்ணை வடிகட்டும் ஆலை நிறுவி "பச்சைலை" நறுமண எண்ணெய் சீமைக்கு ஏற்றுமதி பண்ணினார். மீண்டு எழுந்து வந்தார் கெல்லி. அதனால் தமிழர்கள் மேல் அதீத அன்பு.

அடிவாரத்தில் இருக்கும்சாம் சொன்ன சாப்பாட்டுக்கடைக்குள் நுழைந்தேன். சாயந்திரமானதால் கடையில் கூட்டம் அதிகமில்லை. சிலர்  புரோட்டாவை  முட்கரண்டியால்  கொத்தி குத்தி தின்றுகொண்டிருந்தார்கள். சிலர் கோபி குடித்துக்கொண்டிருந்தார்கள்.

 “குடிக்கிறீங்களா” என்ற சாம்மிடம்

இல்ல பார்சல் வாங்கிக்கலாம் சம்பந்தன்” என கடைக்காரரிடம் ,

தே தாரிக் குராங் மனிஸ் (சீனி குறைவா ஒரு டீ )” என்றேன். தே  தண்ணியை நெகிழி பையில் ஊற்றிக்கொடுத்தார்கள். கடைக்காரரிடம் ஐந்து வெள்ளியை கொடுத்துவிட்டு வண்டி ஏறினேன்.

வண்டியை சாம்தான் ஓட்டினான்சாலையில் வெண்ணை போல வழுக்கிக் கொண்டு சென்றது. சில நிமிடங்களில் ஹவே 1 க்குள் நுழைந்ததுஹவே 1 தான் மலேசியாவின் முதுகெலும்பாக இருந்தது ஒரு காலத்தில். வடக்கே தாய்லாந்து எல்லை கடாரத்திலிருந்து சிங்கை எல்லை ஜோஹோர் பாரு வரை மலேசியாவின் அதிக ஊர்களை இணைக்கும் சாலை.

கெல்லிஒரு அரண்மனை கட்டி தனது மனைவிக்கு அன்புப் பரிசாக அளிக்க திட்டமிட்டிருந்தார். அதுவும் தமிழக கட்டிடக் கலையை பின்னணியாகக் கொண்டு பெரிய அரண்மனையைக் கட்ட  கெல்லி திட்டமிட்டார்.

அதைக் கட்டுவதற்கு ஆட்கள் தேடும்போதுதான் தமிழ்வாணன் அறிமுகமானார்காரைக்குடியில். நகரத்தார் வீடுகளை அழகியலுடன் கட்டுவதில் தமிழ்வாணன் கில்லாடி.
தமிழகக் கட்டிடக் கலையில் அரண்மனையைக் கட்ட தமிழக கட்டிடக் கலைஞர்கள் 70 பேரை மலேயாவுக்கு அழைத்துச் வந்தார்தமிழ்வாணன். அரண்மனைக்குத் தேவைப்பட்ட  செங்கல்லையும்மணல்பளிங்கு போன்றவற்றை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து இந்த அரண்மனையைக் கட்ட தொடங்கினார்.

மரவேலைப்பாடுகளுடன் நிலைசன்னல்கதவு என அரண்மனை ஆறடுக்கு மாடியாக  வளர்ந்தது.

அப்போதுதான் இடி மாதிரி அந்த நிகழ்வு. கட்டடப் பணியின்போது பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களைமர்மக் காய்ச்சல் கடுமையாகத் தாக்கியது. சிலர் இறந்தார்கள். வேலை தடைபட்டது. எல்லோரும் தமிழ்வாணனிடம் முறையிட்டார்கள்ஒரு கோயில் கட்டவேண்டுமென்று. ஆனால் கோயில் கட்ட பணம் வேணுமே. கோயில் கட்ட தமிழ்வாணன் கெல்லி ஐயாவை அணுகியபோதுகெல்லி ஐயா உடனடியாக ஒப்புக்கொண்டு இடமும் பணமும் கொடுத்தார்.அவரது பெருந்தன்மைக்கு நன்றி காட்டும்விதமாகஅவர்கள் கட்டிய முருகன் கோவில் சுவரில் மற்ற தெய்வங்களுக்கு அருகில் கெல்லி ஐயாவுக்கு ஒரு சிலை அமைக்கப்பட்டது.




அரைமணிநேரம் எந்தவித பிரச்னையுமில்லாமல் போய் கொண்டிருந்த கார் போக்குவரத்து நெரிசலால் மெதுவாக ஊர ஆரம்பித்தது.

ஹரி ராயா லீவு லாஅதனால்தான் நெரிசல் ..” என அலுத்துக்கொண்டான் சாம்.

பேச்சு சினிமா பக்கம் சுற்றிவந்து சாதியில் நின்றது. இப்பெல்லாம் யாரு சாதி பார்க்குறா  என்று வாயில் சொன்னாலும் மனதுக்குள் என்னவோ இவன் என்ன சாதியா இருப்பான் என எண்ணம் ஓடுகிறது. இவன் என்ன சாதியா இருக்கும் என தெரிந்து கொள்ள என் மனதுக்குள் ஒரு மிருகம் சுரண்டிக்கொண்டே இருந்தது.  நம்ம ஊரா இருந்தா ஊரை வைத்துசொந்தத்தை வைத்துகலரை வைத்து சாதியைக் கண்டுபிடிக்க பலவகை இருக்கு. இங்க உள்ளவர்ளை  கண்டுபிடிக்க  என்ன வழி  இருக்கு என யோசித்துப்பார்த்தேன். விடை தெரியவில்லை. கடைசியில் நேரடியாகவே கேட்டு விட்டேன்என்ன சாதியென்று. 

"தெரியாது லா" என்றான் சாம் சாதாரணமாக.

ஒரு மூவி பார்த்துட்டு என் அப்பாவிடம் கேட்டேன்லா. சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்க.”  இரண்டு தலைமுறைகள் சாதினா என்னவென்று தெரியாத தலைமுறைகள். கேட்கவே மகிழ்ச்சியாயிருந்தது. எனக்கு அசிங்கமாகவும் இருந்தது.

ஈயம் வெட்டி எடுக்கும் தொழில் சம்பந்தமாக இந்தோனேசியா சென்று விட்டு ஒரு வருடம் கழித்து இப்போதுதான் கெல்லி வருகிறார். அதுவும் கோயில் கட்டிய பின், இப்போதுதான் வருகிறார். சாயங்காலம் ஏழு மணிக்கு ஐயா வருவதாக தகவல். மணி இப்போது ஆறு. எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது. எல்லோரும் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்கள்கெல்லி ஐயாவின் வருகைக்காக.

ஈப்போ வைப்பற்றி சொல்லிக்கொண்டே வந்தான்சாம். ஒரு காலத்தில் ஈயம் வெட்டி எடுத்தார்கள். அதனால் சீனர்கள்தமிழர்கள் அதிகமாக குடியேறினார்கள். தாது வெட்டுவதைப் பற்றி நிறையவே பேசினோம்.

கெல்லியை வரவேற்க இருந்த கூட்டம் கோயிலின்முன் அமர்ந்திருந்தனநேரம் கடந்தோடுகிறது. லேசான தூறல் மழையாக மாறுகிறது. வரவேற்க இருந்த கூட்டம் எல்லாம் கோயில் அருகில் இருந்த மண்டபத்திற்குள் ஒதுங்கின.  மண்டபத்திற்குள் கறிச்சோறுஇனிப்பு பொங்கல் எல்லாம் வாழை இலையில் மூடி வைத்திருக்கிறார்கள். பறை அடிப்பவர்கள் ஓரமாக படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இரவானதுபதினோரு மணியானது. தமிழ்வாணனுக்கு நம்பிக்கை இழந்தபோதுதூரத்தில் இரண்டு புள்ளி வெளிச்சங்கள்.

7 மணிக்கு வரவேண்டிய இடத்துக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்து சேர்த்தோம்முருகன் கோயிலுக்கு அருகில் உள்ள சாலையில் திரும்பி  நிறுத்தினான் சாம். முகவரியை சரிபார்த்தேன். சரியாக இருந்தது. அழைப்பு மணியை அழுத்துவதற்கு ஸ்விட்சைத் தேடினேன்.

தாரை தப்பட்டை சத்தம் விண்ணை எட்டியது. பெண்டலி மோட்டார் காரிலிருந்து கெல்லி ஐயா இறங்கினார்.

தமிழ்வாணனிடம் கை குலுக்கினார். மற்றவர்களைப்பார்த்து வணக்கம் சொன்னார்.
ஒரு வாரத்தில் ஸ்காட்லாந்து பயணம்போகப் போவதாகவும் சீமையிலிருந்து திரும்பிவரும்போதுஅவரது மனைவியையும்  குழந்தைகளையும் அழைத்துவருவதாக இருப்பதால் 1926 சித்திரைக்குள் அரண்மனையை முடிக்க வேண்டும் என கூறினார்.

ஐயா வாங்கமுதலில் சாப்பிடலாம். எல்லோரும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்”, என்றார் தமிழ்வாணன்.

வாப்பா தமிழ்வாணன். எப்படி இருக்கிறேஉன் தாத்தா 60 வருசத்துக்கு முன்னால் விட்டுட்டு போன இடத்துக்கு நீ வந்திருக்கேமகிழ்ச்சி" என தாத்தா வாசல் வரை வந்து வரவேற்றார்.

வீட்டில் இருந்தவர்களை  அறிமுகப்படுத்தினார்.

 "தமிழ்வாணன் முதலில் பசியாறுவோம்" என சாப்பிடும் அறைக்கு அழைத்துச் சென்றார்.

மண்டபத்திற்குள் நுழைந்த கெல்லி ஐயாசாப்பாடு எல்லாம் அப்படியே இருந்ததைக் கண்டு ஆச்சரியத்தில் தமிழ்வாணனிடம் “ஏன் நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையா?” என்றார்.

விருந்தினர் சாப்பிட்ட பின்புதான் நாங்கள் சாப்பிடுவோம்அது சாவா மருந்தே ஆனாலும். இது தமிழர்களோட பண்பாடு.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

It is not fit that one should wish his guests to be outside his house even though he were eating the food of immortality", என G.U.Pope சொன்னதை மொழிபெயர்த்துச் சொன்னார் தமிழ்வாணன்.

தமிழ்வாணனோடு வீட்டில் இருந்த எல்லோரும் சேர்ந்து அமர்ந்து பசியாற ஆரம்பித்தார்கள்.


Wednesday, December 12, 2018

தெப்பம்



பாளையத்திலிருந்து  நிக்காஹ் (திருமணம்) ஆகி சிவகாசி வந்தபோது எல்லாமே வித்தியாசமாக இருந்தது, பாத்திமாவுக்கு. ஒரு பள்ளிவாசல், அதைச்சுற்றி மொத்தமே ஏழு தெருக்கள் தான் முஸ்லிம்கள் வசிப்பது. இருக்கும் முக்கால்வாசி முஸ்லிம்கள் நடுத்தர வர்க்கத்திற்கும் கொஞ்சம் கீழே  வாழ்பவர்கள். அச்சாபீசில் உள்ள சல்லித்தாளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்யும் சில பேர் வசதியாக வாழ்கிறார்கள். மற்றபடி, வீட்டில் கணவனும்  மனைவியும் வேலைசெய்தால்தான் குடும்பத்தை ஓட்டமுடியும். தொழில் சார்ந்த குடியிருப்புக்கள். அட்டைப்பெட்டி ஒட்டுவது, அருகில் இருக்கும் தீப்பட்டி ஆபீசுக்கு கட்டை அடுக்குவதும், போன்ற சிறுதொழில்கள் தான் முக்கியமான தொழில். பெண்கள்தான் வீட்டிலேயே சிறுதொழில் செய்பவர்கள்.

ஒருமுறை சாவலு அம்மாவிடம் பேசும்போது அவர்கள் " கட்டைகளை தீப்பட்டி ஆபீசுக்கு தூக்கிட்டு போகும்போது சேலைக்குப் பதிலாக ஆண்கள் மாதிரி பேண்ட் சட்டை இருந்தால் வசதியாக இருக்கும். அதே மாதிரி முடியையும் ஓட்ட வெட்டினாலும் வசதி. அதிக நேரம் வேலைசெய்யலாம்" என்றபோது பெண்களின் வித்தியாசமான அதிகாரத்தை உணர்ந்த தருணம். எல்லோரும் வேலை வேலை என்றே ஓடிக்கொண்டிருக்கும் ஊர்.
 வீட்டிலேயே சிறு தொழில்கள் செய்வதால் பெண்கள் தான் வீட்டின் தூண்கள். அவர்கள்தான் வீட்டை நிர்வகிப்பவர்கள். பாளையத்தில் வளர்ந்தபோது அப்பாவும் அண்ணன்மார்கள் சொல்வதுதான் சட்டம். அவர்களுக்கு அடங்கியே வாழ்க்கை வாழ்ந்தது இப்போ நினைத்தாலும் அச்சலாத்தியா இருந்தது. திருமணமான பின்புதான் சுதந்திரக்  காற்றை சுவாசிக்க ஆரம்பித்தாள் பாத்திமா.

வந்த புதிதில் அருகில் இருக்கும் கடைக்குச் சென்றாலும் புர்கா போட்டுத்தான் செல்வாள் பாத்திமா. எல்லோரும் வித்தியாசமாக பார்த்தார்கள். அம்மணமா திரியிற ஊரில் கோவணங் கட்டியவன் முட்டாள் மாதிரி இருந்தது. அத்துடன் புர்காவை வீசியெறிந்தாள். சிலநாட்கள் எதையோ இழந்தது போல தெரிந்தது. பின்பு பழகிவிட்டது. சிலநேரம் முக்காடு போடுவதோடு சரி.

பாத்திமாவின் கணவன் இக்பால், சிவகாசியில் இதே வீட்டில் பிறந்து வளர்ந்தவன். நிறைய இடங்களில் வேலை பார்த்த அனுபவத்தில், தனியாக தொழில் செய்கிறான். சூடம் அட்டப் பெட்டி, மெழுகுவர்த்தி அட்டப் பெட்டி போன்றவற்றை வெளிஊரிலிருந்து  ஆர்டர் எடுத்து வந்து மற்ற அச்சாபீஸில் கொடுத்து, செய்து அனுப்ப வேண்டும். அடிக்கடி வெளியூர் செல்லும் வேலை, ஆர்டர் எடுப்பதற்கும், எடுத்த ஆர்டருக்கு பணத்தை வசூலிப்பதற்கும்.
பலவருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. முஸ்லீம் நடுத்தெருவில் இருக்கும் டாக்டர் கல்பனா பாலமுருகன் ஆஸ்பத்திரிக்கு மருத்துவத்திற்காக நடையாய் நடந்தது வீண் போகவில்லை. பல வருடங்கள் கழித்து பிறந்ததால்,ஆசிப் தான் அவர்களின் உலகம்.
இரண்டு அறை கொண்ட ஒரு சின்ன ஓட்டு வீடு. வீட்டின் முன்னே கதவு இல்லாத ஒரு சிறிய கோட்டைச்சுவர்.  வீட்டிற்கும் கோட்டைச்சுவர்க்கும் இடையில் ஒரு மூன்றடி.  அதில்தான் இவர்கள் வளர்க்கும் கோழிகள் அடையும். பகல் முழுவதும் குப்பைமேட்டில் கிளறிக்கொண்டிருக்கும். சாயந்திரமானால் வீட்டில் வந்து அடைந்துவிடும். கோழிகளைப் பாதுகாக்க ரொம்ப மெனெக்கிடுவதில்லை. தற்சமயம் ஆறு கோழிகள், இரண்டு சேவல்கள் தான் இருக்கிறது.

எத்தனையோ தடவை சொல்லியாச்சு. ஒன்னு ஒரு கோழி கூண்டு வாங்கி பூட்டுப்போட்டு வைங்க, இல்லையென்னா   எல்லா கோழிகளையும் வித்துடுங்க. இன்னைக்கு காலையிலே குப்பைமேட்டில நம்ம செவலை கோழி இறக்கைகளை பார்த்தேன், இன்னைக்கு மதியம் பக்கத்து வீட்டு சாவலு (சாகுல்) அம்மா வீட்டிலிருந்து கறிக்கொழம்பு வாசம் வந்தது. அவாதான் நம்ம கோழிய திருடி சமைச்சிருக்கணும். நேரடியா கேட்கலாம்னு இருக்கேன். ஏற்கனேவே அந்த சாவலு  பய வெள்ள கோழி போட்ட முட்டய எடுக்கும்போது கையும் களவுமா பிடிச்சு எச்சரிச்சு அனுப்பினேன். பாத்திமா பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தாள் உள்ளே நுழைந்த இக்பாலிடம்.

அப்படி எதுவும் செய்ஞ்சிராத. பக்கத்து வீட்டுக்காரங்களோட சண்டைபோட வேணாம்.
கோழிதானே போனாப்போகுது. நான் ஊர்ல இருந்து வந்தவுடனே மிச்சமிருக்கிற எல்லாத்தையும் வித்துடலாம்என்றான் இக்பால்.

என் கோழியை விற்க வேணாம்பாஆசிப் க்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

"உன் கோழி எதுடா செல்லம் "என்ற இக்பாலிடம்

"கருப்புக்கோழி" என்றான் ஆசிப்.

"எப்பப்பாத்தாலும் அந்த கருப்புக்கோழி பின்னாடி அலைவானே பார்த்ததில்லையா நீங்க, அது என்னமோ அந்தக் கருப்புதான் இவனுக்குப் பிடிச்சிருக்கு" என்றார் பாத்திமா.

"தமிழ்நாட்டிலே கருப்பு பிடிக்காதவர்கள் யாரு இருக்கா, சொல்லு" என்று ஒரு புன்னகையுடன் பாத்திமாவிடம் கூறி ஆசிப் பைப் பார்த்து 

"வாப்பா ஊருக்குபோய்ட்டு இரண்டு நாளில் வந்திடுவேன், உனக்கு என்ன வேணும் சொல்லு" என மகனுடன் கொஞ்ச ஆரம்பித்தான் இக்பால்.

"எனக்கு கருப்பு கோழிய விக்கக்கூடாது. அது எனக்கு வேணும், என்னோட விளையாட எனக்கு வேணும்"

சரிதான்!!  இனி இவனிடம் பேசி பிரயோசனமில்லே. இனி திருப்பி திருப்பி இதையே தான் சொல்லுவான். 

"சரிப்பா!! உன் கருப்புக்கோழிய விக்கல.  வாப்பா ஊரிலிருந்து வந்தவுடன் ஒரு கூண்டு வாங்கி கருப்புக் கோழியே மட்டும் வளர்க்கலாம் சரியா" என்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் தற்காலிகமாக.

இக்பால் இரவு பஸ் பிடிக்க கிளம்பி போனபின்பு, மற்ற வேலைகளையெல்லாம் முடித்து படுப்பதற்கு 12 மணி ஆகிவிட்டது. உடம்பு அசதியில் படுத்தவுடன் தூங்கிவிட்டாள் பாத்திமா.
திடீரென்று விழித்தாள், அரவம் கேட்டு. மணியைப்பார்த்தாள். 3.30 காட்டியது. கோழிகளெல்லாம் சிறிது அரவமிட்டன. காதைக்கூர்மையாக்கி என்ன சத்தமாக இருக்கும் என் கவனித்தாள் பாத்திமா. ஒருவேளை சாவலு அம்மாதான் கோழி திருட வந்திருக்குதோ என நினைத்தாள்.

எப்படியாவது இன்னைக்கு கையும் களவுமா பிடிச்சிடனும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டே மெதுவாக எழுந்து  சென்று கதவைத் திறந்தாள், கொண்டியில் சத்தம் வராதவாறு. பாத்திமா கதவைத் திறப்பதற்கும்  கோழிகள் அலறுவதற்கும் சரியாக இருந்தது.
மங்கலான இருட்டில் வெள்ளை நிற தெரு நாய் ஒன்று கருப்புக்  கோழியை கவ்விக்கொண்டு வெளியே ஓடியது. சிறிதும் தாமதியாமல் வீட்டை  விட்டு  தெருவில் இறங்கி அந்த அர்த்தராத்திரியில் நாயைத்துரத்த ஆரம்பித்தாள் பாத்திமா. தெருவில் ஓடிய நாயை துரத்திக்கொண்டே கல்லைத்தேடினாள் பாத்திமா. நாய கண்டால் கல்லைக் காணோம் என்ற பழ மொழி உண்மைதான் போல என நினைத்துக்கொண்டாள்.

கோழியின் ஒரு இறக்கையை  நாய் கவ்வி இருந்ததாலும் , மறு  இறக்கையை கோழி பலமாக அடித்ததாலும்  நாயால் வேகமாக ஓட முடியவில்லை.  பாத்திமா ஸ்கூல் படிக்கும் போது வேகமாக ஓடியது. அதன் பிறகு இப்போதான் வேகமாக ஓட வாய்ப்பு வந்துள்ளது. இந்த நைட்டி வேற, ஓடுவதைத் தடுக்கிறது. வேட்டியை மடித்துக்கட்டுவதுபோல்  நையிட்டியை மடித்துக்கட்டினாள் பாத்திமா. இப்போ நன்றாக ஓட முடிந்தது.  நாய் சீதக்காதி தைக்காத்தெரு வைத்தாண்டியது.

யா அல்லா!! இந்த சக்கரை வாவா தெருவை தாண்டுவதற்குள் பிடித்து விடவேண்டும் என் வேகமெடுத்தாள் பாத்திமா.

எதிர்பாராத விதமாக நாய் பள்ளிவாசலுக்கு எதிர்புறமுள்ள தெப்பத்திற்குள் இறங்கியது. தெப்பத்தில் ஐந்தாவது படிக்கட்டு வரை தண்ணீர் கிடந்தது.

எப்படியாவது நாயிடமிருந்து கோழியை மீட்டு விடவேண்டும் என்ற வேகத்தில் தெப்பம் படிக்கட்டில் இறங்கினாள். பள்ளிவாசல் முன்பு இருந்த விளக்கு வெளிச்சத்தில் இப்போது நாய் நன்றாகத்  தெரிந்தது. நாய் ஆறாவது படிக்கட்டில் நின்றுகொண்டு கோழியை கீழே வைத்திருந்தது. பாத்திமாவுக்கு பகீரென்றது. ஒருவேளை கோழியைக் கொல்லப்போகிறதா, கோழியைக் கொன்றுவிட்டதா என நினைத்து நாய் அருகில் நெருங்கினாள் பாத்திமா. தெருநாய், கீழே வைத்திருந்த கோழியின் பிடியைத் தளர்த்தியது. இதுதான் சமயம் என்று இருந்த கோழி இறக்கையை அடிக்கவும் நாயின் பிடி நழுவியது.  அதே சமயம் ஆள் அரவம் கேட்டவுடன் நாய் ஓட்டம் எடுத்தது, கோழியை விட்டு விட்டு.

நாயிடமிருந்து மீண்ட கோழி, இறக்கையை படபடத்ததில், அருகில் இருந்த தண்ணீரில் விழுந்தது. மூச்சிரைக்க வந்து நின்ற பாத்திமாவுக்கு இப்போ வேறே மாதிரியான பிரச்னை. தண்ணீரில் விழுந்த கோழி நடு தெப்பத்திற்குச் சென்றுவிட்டது. பாத்திமாவிற்கு தெப்பத்தின் ஆழம் தெரியும். கோடைகாலத்தில் வறண்ட தெப்பத்தில்  கீழே சென்று தண்ணீர் ஊற ஊற குடத்தில் பிடித்து குடத்தை தூக்கிவந்ததால் இந்த தெப்பத்தைப்பற்றி நன்றாகத் தெரியும்.

நொடியும் தாமதியாமல் பாத்திமா தண்ணீருக்குள் பாய்ந்தாள். சிறுவயதில் நீச்சல் பழகியது கை  கொடுத்தது.  அதிகாலை 3.30 மணிக்கு யாருமேயில்லாத இந்த இரவு நேரத்தில் தனியாக, நாயை விரட்டிக்கொண்டு, ஒரு கோழிக்காக நீச்சலடித்து நடு தெப்பத்தை அடைந்தாள். ஒருவேளை நம்மைப்  பாதுகாப்பவர் வந்துவிட்டார் என பாதுகாப்பாக உணர்ந்ததுவோ, என்னவோ கோழி அசையாமல் இருந்தது. நடு தெப்பத்தில் கிடந்த கோழியை ஒருகையில் பிடித்துக்கொண்டு நீச்சலடித்து கரையை அடைந்தாள் பாத்திமா.
நைட்டியில் ஈரம் சொட்ட சொட்ட கையில் கோழியை பிடித்துக்கொண்டு  வீடு நோக்கி நடந்தாள். அப்போதுதான் கவனித்தார், மோதியார் (தொழுகைக்கு அழைப்பவர்) பள்ளிவாசலை நோக்கி நடந்துவருவதை. அருகில் வந்ததும் பாத்திமா மோதியாரை பார்த்து 
"அஸ்ஸலாமு அலைக்கும்" என்று முடிக்கும் முன்னரே "வாலைக்கும் ஸலாம்! ரஹ்மதுல்லாஹி பரகாத்துஎன்றார் மோதியார்.

ஈரத்தில் உடம்போடு ஒட்டிய நைட்டி, கையில் கருப்புக்கோழி இந்த கோலத்தில், இந்த இரவு நேரத்தில் தனியாக வந்த பாத்திமாவைப் பார்த்ததும் பதறிவிட்டார்.  என்னம்மா இந்த நேரத்தில்? " என்றார் குழப்பமாக.

தெரு நாய் கோழியை தூக்கிட்டு வந்த கதையை விளக்கினார், பாத்திமா.

"நான் இந்த கோழிய பிடிக்கலைன்னா, நான்தான் வித்துட்டேன்னு ஆசிப் நினைச்சுக்குவான். அதனால் தான் எப்பாடு பட்டாவது கோழியை பிடிக்கனும்னு ஓடி வந்தேன்.

அதற்கு மோதியார் " இதைக் கேட்டவுடன்  எனக்கு சிறு வயதில் படித்த குறள் ஞாபகம் வருது.
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாக இருக்குது”.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

பார்த்து வீட்டுக்கு போமா, என்று பள்ளிவாசலுக்குள் நுழைந்தார் மோதியார், காலைத்தொழுகைக்கு பாங்கு (தொழுகைக்கு அழைக்க) சொல்ல.

==================================================================
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள் கலைஞர்
=================================================================