திண்டுக்கல் புனித மரியன்னை பழைய மாணவர்கள் 25 வருடங்கள் கழித்து இன்று அதே
பள்ளியில் அதே உணர்வுகளுடன், பழைய நினைவுகளுடன் கூடும்
விழா நடந்துகொண்டிருந்தது.
“அப்பா எங்க போறீங்க?, நானும் வருகிறேன்”, என்றாள் என் மகள்.
“இல்லம்மா, அப்பா படிச்ச பழைய வகுப்பைப் பார்க்கப் போறேன்.”
“அதைத்தானே மதியம் பார்த்தீங்க, இருட்டில் எதுக்கு திரும்ப பார்க்கப் போகிறீங்க?, சரி, சரி, சீக்கிரம்
வந்துருங்க என்னோட ப்ரோக்ராம் இருக்கு.” என்ற என் மகளிடம்
“இல்ல, நான் 11ம் வகுப்பு படித்த வகுப்புக்குப் போகிறேன். நீ தம்பிகளைப் பார்த்துக்கோ.” என்றபடி நடந்து கொண்டிருக்கும்
விழா மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்.
மாலை 7 மணியாக இருந்தாலும், கரு மேகங்கள் அதை இரவாகக்
காட்டின.
மதியம் சாப்பாட்டுடன் ஆரம்பித்த விழா, பின்பு நாங்கள் படித்த 12ம் வகுப்பில், மாணவர்களாக நாங்கள், ஆசிரியர்களாக பழைய ஆசிரியர்கள் வகுப்பெடுத்தது பழைய நினைவுகளைத்
தட்டியெழுப்பியது. இருந்தாலும் என் மனம் 11ம் வகுப்பைப் பார்க்கணும் என அலை
மோதியது. என் வாழ் நாளில் திருப்புமுனை ஏற்படுத்திய அந்த இடத்தை நோக்கி நடக்க
ஆரம்பித்தேன்.
“கவலையின் சுவடரியாக் காலமாய்
கண்முன் வருவது எங்கள் பள்ளி பருவம்!
கடந்து வந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் சொர்க்கம் என்று இப்போதும் உள்ளுக்குள்
உணர்கிறோம் நாங்கள்!” என்று யாரோ ஒருவர்
எழுதியதை சிறு குழந்தை ஒன்று விழா மேடையில் வாசிப்பது மெலிதாக காற்றில் கரைந்து
போய்க்கொண்டிருந்தது.
“சார், அந்தப்பக்கம் வழி இல்லை.”, குரலைக் கேட்டுத் திரும்பினேன்.
நின்றுகொண்டிருந்தவனை அவன் போட்டிருந்த
சீருடையும், குச்சியும், வாட்ச்மேன் என்று பறைசாற்றியது. நான் அவனைப் பார்த்தேன். என் கோட் சூட்டைப்
பார்த்து என்ன நினைத்தானோ தெரியவில்லை, "எங்க
போணும்னு சொன்னா, வழி சொல்றேன்" என்றான்.
ஆள் பாதி ஆடை பாதி என சும்மாவா சொன்னார்கள்.
இருபது வருடமாக வெயிலோ மழையோ கோட்டு சூட்டு போட்டுட்டுதான் சுற்றுகிறேன்.
“என்னப்பா! உன் பெயரென்ன, எப்போதிருந்து இங்கே வேலை பார்க்கிற?”, என வினவினேன்.
“யாகப்பன் சார். 6 மாசமா வேலை பார்க்கிறேன்”, என்றான்.
போக வேண்டிய இடத்தைச் சொல்ல எத்தனிக்கும் போது
தான் கவனித்தேன் எனக்குப் பாடம் எடுத்த
அறிவியல் வாத்தியார், சாமி நடந்து வருவது தெரிந்தது. பல வசதிகள் இருந்தும் ஆசிரியர் தொழிலையும், வேளாண்மையையும்
இரு கண்களாகக் கருதுபவர். அந்த காலத்தில் ராசுக்குட்டி பட ஸ்டைலில் புல்லட்டில்
பள்ளிக்கு வரும் அறிவியல் ஆசான் அவர்.
“சார், வணக்கம். என்னைத் தெரியுதா?”
“தெரியலையே” என்றார் நெத்தியைச் சுருக்கியபடி.
“நான்தான் சார், ஜோசப், டேவிட் பாஸ்டரோட மகன்.”
“நல்லா இருக்கியா? அப்பா தவறிட்டதா கேள்விப்பட்டேன், நீ எங்க
இருக்கிறே?”.
“ஆமா சார், இப்ப நான் சென்னையில் ஒரு கம்பெனி நடத்துறேன்”, என்றேன்.
“நல்லாருப்பா., எங்க கெளம்பிட்ட
அதுக்குள்ள?”
"லேப் பக்கம் இருந்த பழைய 11ம் வகுப்ப பார்க்கப் போறேன்".
“ஆய்வகம்னு சொல்லுப்பா”, என்றார் புன்முறுவலுடன்.
அப்போதுதான் எனக்கு உரைத்தது, அடடா! இவர்
நல்லதமிழ் பேசச்சொல்லுபவராச்சே. அதுவும் கோவக்காரராச்சே. கவனமா பேசணுமே.
“சார்! தெரியாம ஆங்கில வார்த்தை வந்திருச்சு”.
"வார்த்தை என்பது ஒட்டுண்ணி. தமிழ்ல நல்ல இனிய சொற்கள் இருக்கும்போது
எதுக்குப்பா?".
என் மனம் 11ம் வகுப்பைப் பார்க்கப்போவதிலேயே
நிலை கொண்டிருந்ததால் இவரிடமிருந்து தப்பித்தால் போதும் என “சார்” என
ஆரம்பிக்கும் போது, இடையில் புகுந்த யாகப்பன்,
“பயங்கர ஆச்சரியம் சார், இவரை நல்லா ஞாபகத்துல வச்சிருக்கீங்க?”, என்றான்
“ஆச்சரியம் இல்லே தம்பி, வியப்பு”, எனத் தமிழ் வகுப்பு எடுக்கத்
துவங்கினார்.
இதுதான் சரியான சமயம் என அவரிடம் சொல்லிவிட்டு
நழுவி நடக்கத் துவங்கினேன் ஆய்வகக் கட்டடத்தை நோக்கி.
என் அப்பா டேவிட் C.S.I கிறிஸ்தவ பாதிரியார். வீட்டில் தினமும் பைபிள் வாசிக்க வேண்டும். எல்லாப் பிரச்சனைகளுக்கும்
பைபிளில் இருந்தே மேற்கோள் காட்டிப் பேசுவார். அதனால் எனக்கும் எல்லா நேரங்களிலும்
என் அப்பாவுடன் விவாதம் ஏற்படும். என் வீட்டில் இரண்டு அக்காக்களுக்குப் பிறகு நான்
தான் கடைக்குட்டி, ஒரே பையன். அப்பா மிகவும்
கண்டிப்பானவர், அதே சமயம் அன்பானவர். எது சொன்னாலும்
காது குடுத்துக் கேட்பார்.
10ம் வகுப்பு படிக்கும்போது
அக்காவின் உடைகளைப் போட்டு வீட்டிற்குள் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு
பிரம்பை எடுத்து இரண்டு சாத்து சாத்தினார்..
“ஆண்கள் உடைகளைப் பெண்கள்
அணியக்கூடாது. பெண்கள் உடைகளை ஆண்கள்
அணியக்கூடாது. இது கடவுளுக்கு அருவருப்பானதுன்னு பைபிளில் போட்டிருக்கிறது
தெரியாதா?” என்றார் கண்ணில் கோபம் கொப்பளிக்க.
“நீங்கள் அணியும் துணிகளை விட
உங்க உடம்புதான் முக்கியம்,” இதுவும் பைபிளில்தான்
இருக்கு. “கடவுள் அன்பானவர், பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள் அப்படித்தானே கடவுள் சொல்றார். நீங்க ஏன்
என்னை அடிக்கிறீர்கள்”, அழுதுகொண்டே அப்பாவிடம் சொன்னது
இன்னும் பசுமையாக இருக்கின்றது.
அப்பாவிற்கு ஒரு நொடி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நிதானத்துக்கு வந்து,
“அதில்லேப்பா, இது தப்பு. பிரம்பால அடிச்சி எதுக்கு ஒழுக்கப்படுத்துறேன்? நீ நல்ல பையனா வளர்வதற்கு, எல்லாம் உன்
நல்லதுக்குத்தான்." சொற்பொழிவாற்றி முடித்தார். ஆனாலும் எனக்குள் பெண்கள் உடைகளை அணியவேண்டும் என்றே உள்ளிருந்து உந்தித் தள்ளியது.
ஆய்வகத்துக்கு அருகில் வந்திருந்தேன். கொஞ்சம்
இருட்டாக இருந்தது. மேலே முதல் மாடியை நோக்கிப் படியேறினேன். இதே படிகளில்
எத்தனைபேர்கள் என்னைக் கடந்துபோகும் போது கத்துவதும், என் இடுப்பைக்
கிள்ளுவதும்... தொண்டைக்குழி அடைத்தது. 11ம் வகுப்பு
வந்தபோது தான் என் உடம்பில் சில மாற்றங்களை உணர்ந்தேன். இடுப்பில் யாராவது கை வைத்தால் என்னை அறியாமலே, 'ஆ!' என சத்தம் வந்தது என் வாயில். இதையே சக மாணவர்கள் வேண்டுமென்றே இடுப்பில்
கை வைப்பதும், கிள்ளுவதும்
நடந்தது. நான் போடும் சத்தத்தை ரசிப்பதும் அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு.
படிப்பு எனக்கு நன்றாக வந்ததால், 11ம் வகுப்பில் முதல் குரூப். மற்ற
பிரிவிலிருந்தும், பள்ளியிலிருந்தும் நிறைய பேர்
வந்ததால் பெரிய வகுப்பு. பார்க்காத முகங்கள் பல. முழுக் காற்சட்டைக்கு
மாறியிருந்தேன்.
நேருஜி நகரிலிருந்து வரும் சீனி வேறு
பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்தவன். அவன் அப்பா அரிசிக்கடை வைத்திருந்ததாலும், வகுப்பில் மேலும் இரண்டு சீனி இருந்ததாலும் எல்லோரும்
அவனை அரிசிக்கடை சீனி என்றே அழைத்தார்கள். வந்தது முதலே என்னைச் சீண்டிக்கொண்டிருந்தான். அடிக்கடி என் இடுப்பைக் கிள்ளுவது, என் பின்புறத்தை தடவுவதுமாக நிறைய சீண்டல்கள்.
எல்லைமீறுவது மாதிரி எனக்குத் தெரிந்ததால் என்
அப்பாவிடம் புகாரளித்தேன்.
“ஒருவரின் சம்மதமில்லாமல்
அவர்களின் உடம்பில் அத்துமீறுவது குத்தம்னு தெரியாதா உனக்கு. நாலு அறை
விடவேண்டியதுதானே” என்றார்.
“என்னப்பா! ஒரு கன்னத்தில்
அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டணும்னு இயேசு சொன்னார்னு நீங்கதானே சொல்லிகுடுத்தது”, என்றேன்
பரிதாபமாக.
“அதே இயேசுதான், சாட்டையடி கொடுத்து கோயிலில்ல கடை போட்டிருந்தவர்களை அடிச்சி விரட்டியது.
யார்ட்ட நம்ம கன்னத்தைக் காட்ட வேண்டும் யார்ட்ட நம் வீரத்தைக் காட்ட வேண்டும் என்று இருக்கிறது ஜோசப். காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது, ஆங்கில அரசாங்கம் பதறியது. அதே உண்ணாவிரதம் ஈழத்தில் என்னாச்சின்னு
உனக்குத் தெரியும். சிலரிடம் அவர்கள் புரியும் விதத்தில் அவர்கள் மொழியில்
சொன்னால்தான் புரியும்.” என்றார் விபரீதம் புரியாமலே.
மூடியிருந்த 11ம் வகுப்புக்குள் சன்னல் வழியாக
எட்டிப்பார்த்தேன். அதே பழைய மர இருக்கைகள்
மாறவேயில்லை. இதே கதவுக்கு அருகில்தான் சீனியுடன் சண்டை. இதே கதவை அடித்துதான் என்
கையில் உண்டான தழும்பு. இதே வகுப்பில்,
அறிவியல் பாட நேரத்தில், தேர்வுத் தாள்களைக் கொடுத்து, அடியும் கொடுத்ததால், வகுப்பு மயான அமைதியாக இருந்த போது, சாமி
வாத்தியார் கரும்பலகையில் எழுதிப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது, என் பின் பெஞ்சில் இருந்த அரிசிக்கடை சீனி, வேண்டுமென்றே
என் இடுப்பில் கை வைத்த போது 'ஆ!' என்று பலமாகக் கத்திட்டேன். என் சத்தத்தைக் கேட்டு வகுப்பில்
இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். எனக்கு அழுகையே வந்துவிட்டது. ஏற்கனேவே கோபத்தில் இருந்த சாமி வாத்தியார் என்மேல் சாமி ஆடிவிட்டார், என்ன? ஏது? என்று விசாரிக்காமலே. அவர் அடிக்கும் போது, அழுகையை விட இடுப்பைத் தொடுவதை எவ்வாறு
தடுப்பது என மனதிற்குள் ஓடிக்கொண்டேயிருந்தது.
கடைசி வகுப்பு முடிந்து கிளம்பும்போது, எல்லோரும் பார்க்கும் போதே, எல்லா பலத்தையும் கையிற்குக் கொண்டுவந்து ஓங்கி சீனி முகத்தில் ஒரு குத்து
விட்டேன். அடுத்து 5 நிமிடங்கள் யார் அருகில்
வந்தாலும் தாக்குதல் நடத்தினேன். எத்தனை அடி அவன் மேல் விழுந்தது எத்தனை என்மேல்
விழுந்தது எதுவும் தெரியாது. எங்கிருந்து இந்தத் துணிவு வந்ததோ தெரியவில்லை.
ஒருவேளை அப்பா குடுத்ததோ?
கூடப் படிக்கும் இளங்கோதான் என்னைத் தடுத்து
நிறுத்தியது. பின்புதான் தெரிந்தது, சீனி முகத்தில் இரத்தம், என் கையில், காலில் இரத்தம். பெரிய கூட்டம் கூடிவிட்டது. வீட்டிலிருந்து அப்பாவை
அழைத்து வரச்சொன்னார்கள்.
மறுநாள் காலை பாதர் பெலிக்ஸ் அறையில் நான், என் அப்பா, அரிசிக்கடை சீனியும் அவன் அப்பாவும் இன்னும் பல ஆசிரியர்கள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, சீனிக்கு முன் பல் உடைந்த
சேதி.
“என்ன பாஸ்டர், உங்க மகனே இப்படி பண்ணலாமா? விவிலியம்
சொல்லிகுடுத்து வளர்க்கலையா?”, என என் அப்பாவைச்சாடினார்.
என் அப்பா பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
சீனியின் அப்பாவோ குரலை உயர்த்தி
பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அரிசிக்கடை சீனியின் அப்பா "சார்! உங்க பையன், பொம்பள பிள்ளை மாதிரி
ஆட்டி ஆட்டி நடந்தா பசங்க சீண்டத்தான் செய்வார்கள் அதில் என்ன தப்பு? " என்றார் தெனாவெட்டாக.
"என்ன பேசுறீங்க, தெரிந்து தான் பேசுறீங்களா. உங்க மகள் ஆட்டி ஆட்டி நடக்கும் போது கைய பிடிச்சு இழுத்தா சும்மா விட்டுடுவீங்களா? நான் போலீஸ் போனேன்னா ஸ்கூல் பேர் நாறிடும். நானும் பொறுமையா பேசி
தீர்த்துக்கலாம்னு பேசினா ரொம்பத்தான் அதிகமா பேசுறீங்க" என்று
ஆடித்தீர்த்துவிட்டார்.
கடைசியில் சமாதானம் பேசி, இனி சீனி என் பக்கம் வரக்கூடாது என
முடிவானது.
வீட்டிலும் வெளியிலும் இப்போது அரசல் புரசலாகத் தெரிய
வந்தது, இவன் அவன் இல்லை என.
ஏற்கனேவே வீட்டில், "இவன் போக்கு சரியில்லை, இவனுக்காக வேண்டுதல் செய்யணும்" என்று நிறையபேர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார் என் அம்மா. ஆனால் என் அப்பாவுக்கு
என்னைப்பற்றி நன்கு தெரிந்துவிட்டது.
வீட்டிற்குச் சென்றவுடன் தனியாக மொட்டை
மாடிக்கு அழைத்துச்சென்று அறிவுரை கொடுக்க ஆரம்பித்தார்.
“எல்லாப் பெண்களிடமும் பெண்மை
கலந்த ஆண்மை இருக்கும். அதே சமயம் எல்லா ஆண்களிடமும் ஆண்மை கலந்த பெண்மை
இருக்கும். சிலரிடம் அது அதிகமாக இருக்கும். இதெல்லாம் மனசுக்குள் வச்சிக்காதே .
நீ நீயாக இருடா ஜோசப்..” என ஆறுதலாகத் துவங்கினார்.
என்னைப்புரிந்து எனக்கு ஆறுதலாக அணுகியதால்
வெடித்து அழுதுவிட்டேன்.
“நான் மட்டும் ஏன்பா இப்படி
இருக்கிறேன்? கடவுள் என்ன மட்டும் ஏன் இப்படி படைச்சார்? கடவுள் ஆணும் பெண்ணுமாக படைச்சார்னா, இரண்டு
பாலினம் மட்டும்தான் படைச்சாரா?“
“இல்லைடா ஜோசப், கடவுள் ஆதியும் அந்தமுமாக இருக்கிறார் என்றால் முதலும் கடைசியும்
மட்டும் இல்லை. இடைப்பட்ட எல்லாமுமாக இருக்கிறார். அதுபோல ஆணும் பெண்ணும் படைக்கல.
இடைப்பட்ட மற்ற பாலினத்தையும் படைத்தார்.” சற்று
இடைவெளி விட்டு.
“இந்த மாதிரி தினமும் ஒருத்தன
அடிப்பியா? இப்படி ஒவ்வொரு நாளும் அடித்தாலும் எத்தன
பேர, எத்தன நாள்தான் அடிப்ப. உன்னை நீயே உயர்ந்த
இடத்துக்கு கொண்டு போனால் தான் உன்னை மதிப்பார்கள். இல்லையென்றால் இப்போ வகுப்பில்
நடந்த மாதிரி நாளை வெளியிலும் நடக்கும். அதற்கு ஒரே வழி, படிப்பு” என்றார் முடிவாக.
இந்தச் சம்பவத்துக்குப் பின் யாரும்
நெருங்கவுமில்லை. யாரையும் நெருங்கவும்விடவில்லை. என்னைச் சுற்றி நானே ஒரு வேலி
அமைத்துக்கொண்டேன். இளங்கோ தவிர வேறு யாரிடமும் அவசியமின்றிப் பேசுவதில்லை. பையன்கள்
போகும் கழிவறைக்குப் போகப் பிடிக்காததால்
எல்லோரும் போன பின்புதான் அங்கு செல்வேன். வெறித்தனமாகப் படிக்க ஆரம்பித்தேன் தளர்வாக, நீளமாக மேல் சட்டையைத் தைத்துப் போட்டுக்கொண்டேன், மற்றவர்களுக்கு
நான் நடப்பது உறுத்தாதவாறு. என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன். நூல்கள் மட்டுமே
என் துணையாக இருந்தன. சோர்ந்து போகும்போதெல்லாம் என் அப்பாத்தான் எதாவது சொல்லி
ஆறுதல் படுத்தினார்.
12ம் வகுப்பில் நல்ல
மதிப்பெண்கள் வாங்கி அதே திண்டுக்கல்லில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தேன்.
இடையிடையில் இந்த உடம்பும் எனக்கு வேணாம் எனத் தோன்றியது.
“ அப்பா! நான் அறுவை
சிகிச்சை பண்ணப்போறேன். எனக்கு இது வேணாம்”, என்று
ஒருநாள் ஆரம்பித்தேன்.
“இல்லப்பா, பைபிளில இந்த மாதிரி பண்ணக்கூடாதுனு போட்டிருக்கு, இதைப் பண்ண வேணாமே, எனக்காக" என்று
தடுத்ததால் அந்த முயற்சியைக் கைவிட்டேன்.
என் அப்பாவின் திடீர் மரணத்திற்குப்பின்
வாழ்க்கையில் வெறுமை.
குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கலாம் என
விசாரித்த போது தான் தெரிந்தது, திருமணமாகாத ஆண்கள் தத்து எடுக்க முடியாதென்று. கடைசியில் அருட்கொடையாக, வந்த சுயமரியாதை திருமண நிலைய உதவியால், வந்த
முத்துக்கள் மூன்று.
சிறிது நேரம் பூட்டியிருந்த கதவருகில்
நின்றுவிட்டு பெருமூச்சுடன் திரும்பி மண்டபத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். மண்டபம் அருகில் வரும்போது
வாசலுக்கருகில் சாமி வாத்தியார் நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன்
"என்ன தம்பி போனீங்களா?", என்றார்.
"பார்த்தேன் சார்", என்று பதிலளித்து விட்டு படிக்கும் போது கேட்க நினைத்த கேள்வியை அவரிடம் கேட்டேன்."ஏன் சார் நீங்க நல்லதமிழ்ல பேசச் சொல்றீங்க, நல்ல
ஆங்கிலமும் பேசச் சொல்றீங்க, வடமொழிச்சொல் இருந்தா
திருத்துறீங்க. புரிஞ்சிக்கவே முடியல சார். "
சிறிய முறுவலுடன் "தம்பி! உன் வீட்டில்
உன் முன்னோர்கள் வச்ச ஒரு மரம் இருக்குதுன்னு வச்சுக்குவோம். அந்த மரத்தில் நிறைய
ஒட்டுண்ணி இருக்குது. அதனால மரத்தோட இலைகள்
வெள்ளையாக இருக்கு. ஒட்டுண்ணின்னா உனக்குத் தெரியும்ல. மரத்திலிருந்து சத்தையெல்லாம்
உறிஞ்சி அது வளரும். நீ என்ன செய்வே?
சாமி வாத்தியார், ஒட்டுண்ணி என எதைச் சொல்கிறார் என தெரிந்தது. பொதுவாக
ஒரு பதிலை சொல்லலாம் என, "முன்னோர்கள் ஒன்னும்
முட்டாள்களில்லை சார், ஏதாவது இருக்கும்" என்றேன்.
அதையே வேறு மாதிரி கேட்டார், “சரிப்பா, உன் முன்னோர்கள் எதுவும் செய்யமுடியாமல் அந்த ஒட்டுண்ணிகளுடனே மரத்தை
வளர்த்தார்கள். அதனால எல்லோரும் இலைகள் வெள்ளைதான் என நினைச்சிக்கிட்டாங்க. இலைகள் பச்சை வண்ணம் தான்னு உனக்குத் தெரிஞ்சிபோச்சி. மேலே படர்ந்திருக்கும்
வெள்ளை, ஒட்டுண்ணினும் தெரிஞ்சிபோச்சி. அதை
ஒழிக்க என்ன செய்யணும்னு தெரியும்.. இருந்தும் 'ஓ, என் முன்னோர்கள் இந்த ஒட்டுண்ணியுடன் வாழ்ந்தவர்கள், அவர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை’ அப்படினு
சொல்வாயா இல்ல மருந்தை அடித்து, ஒட்டுண்ணியை விரட்டி
விட்டு மரத்தை நன்கு வளர்ப்பாயா?” என்று
சொல்லிக்கொண்டிருக்கும் வேளை
திடீரென்று மண்டபத்துக்குள் இருந்து சினிமாப் பாட்டு சத்தமும் அதைத் தொடர்ந்து அனைவர்களது உற்சாகக்குரல்களும்
விண்ணைப்பிளந்தன.
சாமி வாத்தியார் வியப்புடன் என்னைப்
பார்த்தார். “என்னப்பா நடக்குது?".
அதே நேரத்தில் யாகப்பன் மண்டபத்திலிருந்து
வெளியே வந்தான்.
“தம்பி என்னப்பா நடக்குது?“, என்றார் சாமி வாத்தியார்.
“டான்ஸ் சார், அதுவும் ஒரு ஒம்போது சூப்பரா டான்ஸ் ஆடுது சார்? போய் பாருங்க சார்”
மறு நொடியே கன்னத்தில் பளார் என அறை விழுந்தது
யாகப்பனுக்கு.
சாமி வாத்தியார், படு கோவத்தில் “திருநங்கைனு
அழகான சொல் இருக்கும்போது நீ ஏன்டா சுடு சொல் சொல்ற”.
இன் சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை
உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ்சொற்களைப் பயன் படுத்தவேண்டும்?
என் அப்பாவைப் பார்த்த உணர்வு. அந்த
இடத்தைவிட்டு உடனே நகர்ந்தேன், மேடையில் நடனமாடும் என் மகளைக் காண.
========================================================================
0 comments:
Post a Comment